திமுக அரசு தான் முழு பொறுப்பு; பதில் சொல்வாரா ஸ்டாலின் anna university| annamalai| BJp| mk stalin
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த குற்றத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியதையடுத்து கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சூழலில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன், ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் பலமுறை ஈடுபட்டவர் என்பதும், திமுகவின் சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரியவந்து இருப்பதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை தமிழகம் முழுவதும் இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. ஒரு குற்றவாளி, திமுகவில் உறுப்பினர் ஆவதோடு, அந்த பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், காவல் நிலையத்தின் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார். அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது. தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவை சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று அப்பாவி மாணவிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. இதற்கு திமுக அரசே முழு பொறுப்பு. எவ்வளவு காலம்தான் தமிழக மக்கள் இந்த நிலையை பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதல்வர் ஸ்டாலின் இப்போதாவது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என அண்ணாமலை கேட்டு உள்ளார்.