மிளகாய் பொடி தூவி பட்டப்பகலில் சம்பவம்; வீடியோ வைரல் | ATM Cash Vehicle | ATM Cash Loot | Karnataka
கர்நாடகா பீதர் டவுன் பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடம் உள்ளது. நகரின் மையப்பகுதியான இங்கு எப்போதும் ஆள்நடமாட்டம் அதிகம் இருக்கும். இன்று பட்டப்பகலில் இங்குள்ள எஸ்பிஐ வங்கியின் மெயின் பிரான்ச் ஏடிஎம்மில் பணம் நிரப்ப ஏஜென்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய ஊழியர்கள் கிரி வெங்கடேஷ் மற்றும் சிவக்குமார் பணப்பெட்டியை இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 ஆசாமிகள், ஊழியர்கள் சுதாரிக்கும் முன் அவர்கள் கண்களில் மிளகாய் பொடியை தூவினர். ஒரு நிமிடம் நிலை குலைந்தாலும் பணத்தை எடுக்க விடாமல் இருவரும் போராடினர். ஆத்திரமடைந்த கொள்ளை ஆசாமிகள் துப்பாக்கியால் ஊழியர்களை சுட்டனர். 2 பேரும் குண்டு பாய்ந்து சரிந்தனர். பணப்பெட்டியை தூக்கி கொண்டு அந்த கும்பல் பைக்கில் தப்பி சென்றது. அதில் 93 லட்சம் பணம் இருந்துள்ளது. சுற்றிலும் நிறைய பேர் இருந்தும், போக்குவரத்துக்கு இடையேயும் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. யாரும் தடுக்க முன்வரவில்லை. அனைத்து காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. சிலர் சம்பவத்தை வீடியோவும் எடுத்தனர்.