திமுகவில் அதிகாரம் இழக்கும் மந்திரிகள் யார் யார் | MK Stalin | DMK | Ma Subramaniyan | Anbarasan
பவரை பறிக்கும் திமுக தலைமை முக்கிய அமைச்சர்களே கலக்கம்! லிஸ்ட்டில் யார் யார்? தி.மு.க.,வில் மாவட்டச் செயலர்கள் பதவி பறிப்பு நடவடிக்கை தொடர்வதால், சென்னை, காஞ்சிபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை முன்வைத்து, கட்சி மாவட்டங்களை பிரித்து, புதிய நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் நியமித்து வருகிறார். சமீபத்தில், 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, புதிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்; 4 மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டனர். இது களையெடுப்பு அல்ல; கட்டுமானச் சீரமைப்பு. கட்டுமானத்தை உறுதிப்படுத்த சீரமைப்பு தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். அதன் அடிப்படையில், மூத்த மாவட்டச் செயலர்கள் வசம் உள்ள சட்டசபை தொகுதிகளும் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இது பற்றி திமுக வட்டாரம் கூறியது: கட்சியின் நலன் கருதி மாற்றங்கள் தொடரும் என்று முதல்வர் கூறியிருப்பதால், சில அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களும் பிரிக்கப்படலாம். அந்த மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கையும் குறைக்கப்பட உள்ளன. அதனால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். குறிப்பாக சென்னையில் 16 தொகுதிகளுக்கு 6 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரிடம் உள்ள சட்டசபை தொகுதிகளை பிரித்து, கூடுதலாக 2 பேருக்கு மாவட்ட செயலர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இப்போது அமைச்சர் தாமோ அன்பரசன், சுந்தர் எம்எல்ஏ என 2 மாவட்ட செயலர்கள் உள்ளனர். இருவரிடமுள்ள தொகுதிகள் பிரிக்கப்பட்டு, கூடுதலாக 2 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளும் அமைச்சர் காந்தியிடம் உள்ளன. இங்கு மேலும் ஒரு மாவட்டச் செயலர் நியமிக்கப்பட உள்ளார். கடலுார் மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கணேசன் மாவட்ட செயலர்களாக உள்ளனர். இங்கும் இரு மாவட்ட செயலர்கள் கூடுதலாக நியமிக்க வாய்ப்புள்ளது. சேலத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இப்போது செல்வகணபதி எம்பி, அமைச்சர் ராஜேந்திரன், சிவலிங்கம் மாவட்ட செயலர்களாக உள்ளனர். புதியதாக 2 மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதே போல் கோவையில் மேலும் 2 மாவட்ட செயலாளர்கள், நாமக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, கரூரில் தலா ஒரு மாவட்ட செயலாளர் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர் என்று திமுக வட்டாரம் கூறியது.