ஊழல் பட்டியல் விபரம் அறிய படாதபாடுபடும் அரசு பணி ஒப்பந்ததாரர்கள் | DMK Files 3 | Annamalai | BJP | C
பா.ஜ மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, திமுக முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே, DMK பைல்ஸ் -1, பைல்ஸ் - 2 என இரண்டு பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அடுத்து DMK பைல்ஸ் - 3 வெளியிட தயாராகி வருகிறார். வரும் புத்தாண்டில் அதை வெளியிடுவேன் என்றும் சமீபத்தில் அவர் அறிவித்தார். அதன்படி அண்ணாமலையால் இதற்கென்றே அமைத்த சிறப்பு குழு, தமிழகம் முழுதும் அனைத்து துறைகளிலும் நடந்த ஊழல் விபரங்களை திரட்டிக் கொண்டுள்ளது. ஆங்காங்கே இருக்கும் பா.ஜ முக்கிய பிரமுகர்களும், விபரங்களை திரட்டுகின்றனர். இந்த விஷயம் வெளியே கசிந்ததால், திரட்டப்படும் புதிய பட்டியலில் தங்கள் பெயரோ, நிறுவனமோ இருக்கிறதா என்பதை அறிய, தமிழகம் முழுதும் இருக்கும் கான்ட்ராக்டர்கள், பாஜவின் பெரும் தலைகள் மூலம் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுப்பணி, உள்ளாட்சி, சுகாதாரம், மீன் வளம், சமூகநலத்துறை என பல துறைகள் மூலம் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு இத்திட்டங்களை செயல்படுத்துகின்றனர். திட்டங்கள் அரசு தரப்பில் தீட்டப்பட்டாலும், அதை முழுமையாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொறுப்பு தனியார் ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்படுகிறது. குறிப்பாக நெடுஞ்சாலைத் துறை மூலம் போடப்படும் அனைத்து சாலைகளும், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்படுகின்றன. பொதுப்பணித் துறை மூலம் நடக்கும் அரசு துறைகளுக்கான அனைத்து கட்டுமான வேலைகளையும் அதிகாரிகள் தனியார் ஒப்பந்ததாரர்களிடமே அளிக்கின்றனர். சமூகநலத் துறை திட்டங்களிலும் தனியார் ஒப்பந்ததாரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இப்படி தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்க, அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் ஏகப்பட்ட பணத்தை லஞ்சமாக பெறுகின்றனர். இதனாலேயே தரமில்லாத பணிகள் நடக்கின்றன. அமைச்சர்களை கடந்தும், ஒப்பந்ததாரர்கள் அளிக்கும் லஞ்சப் பணம் பாய்கிறது. இதற்கெல்லாம் கடிவாளம் போட வேண்டும் என்பதற்காகத்தான், ஊழல் ஆதாரங்களை சேகரித்து, தொடர்ச்சியாக பைல்ஸ் என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார். வரும் புத்தாண்டில் வெளியிட உள்ள பைல்ஸ் -- 3க்கு ஆதாரம் மற்றும் ஆவணங்களை திரட்டும் பணி நடப்பதால், தமிழக ஒப்பந்ததாரர்கள் பலரும் பதற்றம் அடைந்திருப்பதாக பாஜ வட்டாரத்தில் கூறப்படுகிறது. அண்ணாமலை திரட்டும் ஆதாரங்களில் தங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பதை அறிய படாதபாடு படுகின்றனர்.