குடியரசு தினத்தில் சிறப்பு விருதுகளை வழங்குகிறார் கவர்னர் | Governor award 2024 | Awardees announced
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் 2024ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது வென்றவர்கள் விவரங்களை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த இரு விருதுகளும் சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரித்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்க கவர்னர் மாளிகை சார்பில் கடந்த ஆண்டு ஜூனில் அறிவிக்கப்பட்டது. விருதுகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான குழுவால் ஆய்வு செய்து பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி நிறுவனத்துக்கான சமூக சேவை பிரிவில், கோவை இதயங்கள், சென்னை ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகிய 2 அமைப்புகளும் தேர்வாகி உள்ளது. இந்த அமைப்புகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதயங்கள் அமைப்பு சர்க்கரை நோயால் பாதித்து பராமரிப்பு தேவைப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு சேவை செய்து வருகிறது. ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், ஆட்டிசம், அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, தொழில் பயிற்சி, மறுவாழ்வு சேவைகளை வழங்குகிறது.