மஞ்சள் குங்குமத்துடன் வீசப்பட்ட மனித எலும்புகளால் பரபரப்பு | Human bones | Road side | Police
கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை எப்போதும் வாகனங்கள் பிசியாக சென்று வரும் பிரதான சாலை. இங்கு ரோட்டோரம் மனித எலும்பு துண்டுகள் கொட்டப்பட்டிருந்தன. காலை அந்த வழியாக சென்றவர்கள் எலும்பு துண்டுகளை பார்த்து பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்தனர். எலும்பு துண்டுகளின் அருகே மஞ்சள் குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைத்திருந்ததால் மாந்திரீகம் எதும் செய்திருக்கலாம் என்று மக்கள் அச்சம் அடைந்தனர். ரோட்டோரத்தில் மனித எலும்பு துண்டுகள் கிடப்பதாக புது நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், மாநகராட்சி பெண் ஊழியரை வைத்து எலும்பு துண்டுகளை அள்ளி எடுத்தனர். அந்த பெண் கையுறை கூட இல்லாமல் வெறும் கையால் பிளாஸ்டிக் பாட்டிலை கொண்டு எலும்பு துண்டுகளை பையில் சேகரித்து போலீசிடம் வழங்கினார். அதை கைப்பற்றிய போலீசார், எலும்பு துண்டுகள் யாருடையது, அங்கு எப்படி வந்தது என்பது பற்றி விசாரிக்கின்றனர். பிசியான சாலையின் அருகே மனித எலும்பு துண்டுகள் கிடந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.