பார்லிமென்டுக்கு வெறும் விமர்சகனாக வரவில்லை | Kamal MP | MNM | Rajya Shaba | Voice of TN
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் ராஜ்ய சபா எம்.பி.யாக இன்று பதவி ஏற்றார். அதை ஒரு சடங்காக செய்யவில்லை; அரசியல் அமைப்பை நிலை நிறுத்தும் பணிக்காக பதவி ஏற்றுள்ளேன் என தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: இது எனக்கானது மட்டுமில்லை. என் மக்களுக்கானது. அவர்களுடன் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். நான் என் தந்தையின் உணர்வுகளையும் இந்த அவைக்கு கொண்டு செல்கிறேன். சுதந்திரம் வெல்வதற்கு மட்டுமல்ல, வாழ்வதற்கும் என்று அவர் எனக்கு கற்றுத் தந்தார். என்னுடைய நரம்புகளில் அவருடைய ரத்தம் மட்டுமின்றி அவரால் கற்றுத் தந்த மதிப்பீடுகளும் இருக்கின்றன. நான் பார்லிமென்டுக்கு வெறும் விமர்சகனாக வரவில்லை. இந்தியா என்ற கருத்துக்கு உறுதியான பங்களிப்பு செய்பவனாக வந்திருக்கிறேன். அதை நான் நியாயமாக செய்வேன். எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பேன். ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிப்பேன். ஆலோசனை தர வேண்டி இருந்தால் அதை ஆக்கப்பூர்வமாக செய்வேன். பேர் வாங்குவதற்காக இல்லாமல் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக செய்வேன். நான் தமிழகத்தின் குரலாக டில்லியில் இருப்பேன். ஒரு சமூகத்துக்காக அல்லாமல் பொதுவான நன்மைக்கு பேசுவேன். குறுகிய பயன்களுக்காக இல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பேசுவேன். எனது பயணத்தில் என்னுடன் வந்தவர்களுக்கு நன்றி. என்னை சந்தேகித்தவர்கள் கருத்துகளையும் கேட்பேன். நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்ற மாட்டேன் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.