துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவித்த ஸ்டாலின் | M.K.Stalin | DMK | Vice president candidate
துணை ஜனாதிபதி தேர்தலில் இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:
இண்டி கூட்டணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்.
நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்தி பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை போற்றி பாதுகாத்தவர்.
நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசியலமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது.
தன்னாட்சி அமைப்புகள் அனைத்தும் பாஜவின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்குண்டுள்ளது.
இத்தகைய சூழலில், மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை.
நீட் விலக்கு, நியாயமான நிதிப் பகிர்வு, கல்வி நிதி விடுவிப்பு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான பல கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், மத்திய பாஜ அரசு தமிழகத்துக்கு அநீதி இழைத்து வருகிறது.
கவர்னர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
மாநில உரிமைகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் காக்க, மதநல்லிணக்க உணர்வு கொண்ட தமிழக மக்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து திமுக கூட்டணி எம்பி, எம்எல்ஏக்களுக்கே வாக்களித்துள்ளனர்.
எனவே, சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதுதான் அவர்களது முடிவுக்கும், உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும்.
அரசியலமைப்பு, பன்மைத்துவம், சமூகநீதி, மொழியுரிமைகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதியாக, பார்லிமென்ட் ராஜ்யசபாவில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடமளித்து அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு வாய்ப்பளிக்க கூடியவராக, சுதர்சன் ரெட்டி திகழ்கிறார்.
கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சாதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக சுதர்சன் ரெட்டி மிகச் சரியான தேர்வு என ஸ்டாலின் கூறியுள்ளார்.