தொடர் மழையால் சேதமாகும் வீடுகள்: முறிந்து விழும் மரங்கள் | Heavy rain | Red alert | 3 Days | Kerala
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் கேரளாவின் பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றே கரையை கடக்க வாய்ப்புள்ளதால் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பல இடங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழை விடாமல் பெய்து வரும் சூழலில் திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பாலக்காடு அருகே கஞ்சிராபுழாவில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் நீரில் மூழ்கினர். அவர்களில் 2 பேர் நீந்தி கரைசேர்ந்த நிலையில், மற்ற 2 பேரை தேடுகின்றனர். காசர்கோடில் உள்ள சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. திருச்சூர் அருகே உருலிகன்னு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. தொட்டுப்பாலத்தில் பலத்த மழை, காற்றின் தீவிரத்தால் கிருஷ்ணன்குட்டி என்பவரின் வீடு நள்ளிரவு இடிந்து விழுந்தது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன்குட்டி, மனைவி ரத்னம், மகன் மனோஜ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கனமழை தொடர்ந்து பெய்யும் நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.