செய்தி சுருக்கம் | 08 AM | 08-12-2024 | Short News Round Up | Dinamalar
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11ம் தேதி கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. 11ம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.