செய்தி சுருக்கம் | 08 AM | 09-11-2024 | Short News Round Up | Dinamalar
2018 முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்தபோது இவருக்கு கால்நடைத்துறை செயலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து சத்ய பிரதா சாஹூ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக்கை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இவர் தற்போது தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக இருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெயர் இவருக்கு கிடைத்துள்ளது. அர்ச்சனா, 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்நின்று நடத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 2002ல் ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தார். கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி இருக்கிறார். கோவையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.