கல்லும் கலையும்: ராஜகுமாரியை கவர்ந்து செல்லும் குறவன்
கிருஷ்ணப்ப நாயக்கர் 16ம் நுாற்றாண்டில் புனரமைத்த இந்த வெங்கடாஜலபதி கோவில், விஜயநகரப் பேரரசு சிற்பிகளின் கலைத் திறனை மெச்சுகிறது. கல்வெட்டின்படி, 'கிருஷ்ணாபுரம்' என்று அழைக்கப்படும் இந்த துாத்துக்குடி மாவட்ட சிற்றுாரை உலகறியச் செய்திருக்கிறது இச்சிற்ப களஞ்சியம்! திருநெல்வேலி - திருச் செந்துார் சாலையிலுள்ள இக்கோவிலின் ஒவ்வொரு சிற்பத் தொகுதியும் பல கதைகள் சொல்கின்றன. கோவிலின் வீரப்ப மண்டபத்து ஒரு துாணில் கம்பீரமாய் ஓங்கி நிற்கிறது, கடத்திச் செல்லும் எண்ணத்துடன் குறவன் ஒருவன் அரசியை தோளில் சுமந்து நிற்கும் சிற்பம். அரசியின் வலக்கரம் குறவனின் கொண்டையை பற்றியிருப்பது போலவும், தலையில் முக்காடிட்ட மேலாடை காற்றில் பறக்க, அதை இடக்கரத்தால் அரசி பற்றியிருப்பது போலவும் நுணுக்கமாக வடிக்கப்பட்டிருக்கிறது சிலை. அரசியை சுமக்கும் குறவனின் வலதுகை தசைகள் முறுக்கேறி இருப்பதையும், அவன் மார்பு கூடு விரிவடைந்து இருப்பதையும், எடை தாங்கும் அவனது கால் தசைகளின் திண்மையையும் துல்லியமாய் செதுக்கி இருக்கும் சிற்பி, அரசியின் அணிகலன் நுணுக்கத்திலும் தத்ரூபம் காட்டியிருக்கிறார். 'துரத்தி வரும் குதிரைப்படை வீரனின் ஈட்டியானது குறவனின் விலாவை பதம் பார்த்ததால், வலி தாளாத குறவன் தலை குனிந்து உடல் குறுகி நிற்கிறான்' என்கிறார் தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு.