உங்க பப்பி சோர்வா இருக்கா
கோடை வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்து விட்டது. பருவநிலை மாறும் போது, பப்பி சோர்வாக இருப்பது சாதாரண விஷயம் தான். ஆனால், முறையான பராமரிப்பு இல்லாவிடில், 'ஹீட் ஸ்ட்ரோக்'கால் பாதிக்கப்படும்அபாயம் ஏற்படலாம். முடி அதிகம் கொண்ட வெளிநாட்டு இன பப்பிகளால், திடீர் பருவநிலை மாற்றங்களை தாங்கி கொள்ள முடியாது. குறிப்பாக, வெயிலின் தாக்கத்தால் அவைபாதிக்கப்படும் பட்சத்தில், அதிக சலைவா வெளியேற்றுதல், சோர்வாக இருத்தல், நாக்கை எந்நேரமும் தொங்கவிட்டபடி மூச்சிரைப்பு ஏற்படுதல்போன்ற அறிகுறிகள் இருக்கும். இச்சமயங்களில், அவற்றிற்கு நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் கொடுக்கலாம். இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பால் அலர்ஜி இல்லாத பப்பியாக இருந்தால், தயிர், மோர் சாதம் கொடுக்கலாம். பப்பிகளுக்கான பிரத்யேக 'ஓ.ஆர்.எஸ்.,' பவுடர் கடைகளில் கிடைக்கிறது. இதை தண்ணீருடன் கலந்து கொடுக்கலாம். தினசரி இரண்டு ஐஸ்கட்டிகள் வரை சாப்பிட கொடுக்கலாம்.வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டலாம். நேரடியாக வெயில் படும் இடங்களில் தங்க வைக்காமல், நிழலில் அவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெயிலின் தாக்கம் குறைந்த பின், வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது அவசியம். பொதுவாக வெயில் காலங்களில் முடி உதிர்வு அதிகமிருக்கும். இதற்காக பிரத்யேக சிகிச்சை எடுக்க தேவையில்லை. அளவுக்கதிகமாக கொத்து கொத்தாக முடிஉதிர்வு இருந்தால் மட்டும், கால்நடை மருத்துவரை அணுகலாம். - ஆர்.இந்துமதி, அரசு கால்நடை உதவி மருத்துவர், கோவை.