செங்கற்களை பயன்படுத்தும் முன் பரிசோதிப்பது அவசியம்!
வீ ட்டுக்கான கட்டுமான பணியில் சுவர்கள் எழுப்ப செங்கற்கள் பயன்படுத்துவது என்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இதில் எந்த வகை செங்கல் வாங்குவது, அதை எப்படி பயன்படுத்துவது என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கட்டுமான பணிகளை ஒப்பந்தம் போட்டு, ஒருவரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் தரமான செங்கங்களை பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, ஒப்பந்ததாரர் தரமான செங்கலை பயன்படுத்துவார் என்பதில் அடிப்படை நம்பிக்கை வேண்டும். ஆனால், கட்டுமான ஒப்பந்தத்தில் என்ன வகை செங்கற்களை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் வரும் பெரும்பாலானோருக்கு செங்கல் தயாரிப்பு, தரப்பரிசோதனை போன்ற விபரங்கள் தெரிவதில்லை. இதனால், ஒப்பந்ததாரர் என்ன வகை செங்கலை பயன்படுத்தினாலும் அது குறித்து பலரும் கவலைப்படாமல் இருக்கின்றனர். இதில் குறிப்பிட்ட சில எளிய வழிமுறைகளை தெரிந்து கொண்டால், பல்வேறு வகையான குழப்பங்களை தவிர்க்கலாம். பொதுவாக கட்டுமான பணிக்கு எந்த வகை பணிக்கு எத்தகைய செங்கற்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து சில அடிப்படை விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும். கட்டடத்தில் ஈரம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வழக்கமான செங்கலுக்கு பதிலாக எரிசாம்பல் கற்களை பயன்படுத்தலாம். இன்றைய சூழலில் களிமண்ணை பயன்படுத்தி செங்கல் தயாரிப்பதில் பல்வேறு தவறுகள் நடப்பதால் தரமான செங்கல் கிடைப்பது அரிதாகிவிட்டது. முந்தைய காலங்களில் சூளைகளில் இருந்து கொண்டு வரப்படும் செங்கல், தண்ணீரில் போட்டு ஊறவைக்கப்படும். நன்கு ஊறிய நிலையில் செங்கலை எடுத்து அதில் தண்ணீர் வடிந்த நிலையில் கட்டு வேலைக்கு பயன்படுத்துவர். இவ்வாறு தண்ணீரில் ஊறவைக்கும் போது, செங்கலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்று கவனிக்க வேண்டும். இதில் செங்கலின் ஓரங்கள் கரைந்தாலும் கூட அது முழுமையாக வேகவில்லை என்ற முடிவுக்கு கட்டுமான பணியாளர்கள் வந்துவிடுவர். ஆனால், தற்போது, சூளைகளில் மட்டுமல்லாது, பெரிய ஆலைகள் வாயிலாக, இயந்திரங்களை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு ஆலைகளில் தயாரிக்கப்பட்டாலும், செங்கல் முழுமையாக வேக வைக்கப்பட்டதா என்பதை மக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு கொண்டு வரப்படும் செங்கல் அடுக்கப்படும் நிலையில் எத்தனை உடைப்பு ஏற்படுகிறது என்று பாருங்கள். இதில் ஓரிரு செங்கல் என்ற நிலையில் உடைப்பு இருந்தால் பரவாயில்லை, அதிக உடைப்பு இருந்தால் அந்த லோடு செங்கலை திருப்பி அனுப்புவது நல்லது. தரமான முறையில் தயாரிக்கப்பட்ட செங்கலை முறையாக பயன்படுத்த பணியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது விஷயத்தில் உரிமையாளர்கள் கவனமாக இருந்தால் ஏமாற்றங்களை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.