உரிமையாளரை உறுதி செய்யும் சொத்துரிமை ஆவணம் நில உரிமைக்கு பட்டா முதன்மை ஆவணம் அல்ல
ஒருவர் ஒரு நிலத்தின் உரிமையாளராகி அனுபவிக்க விற்பனை, பாகப்பிரிவினை அல்லது வேறு சொத்துரிமை ஆவணம் பதிவு செய்வது அவசியம்.இந்த ஆவணம் வாயிலாக, ஏற்கனவே உள்ள உரிமையாளர் தன் நிலத்தின் மீது உள்ள, அனைத்து உரிமைகளையும், விட்டுக்கொடுத்து விடுகிறார்.இதற்கு ஈடாக, ஒரு தொகை பெறப்படின் அது விற்பனை ஆவணம். இந்த முறையே நிலம், கட்டட சொத்துரிமை பெற பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. ஆவணம், அரசு சார் பதிவாளரிடம் பதிவு செய்யப்படும்போது, சொத்துரிமை சட்டபூர்வமாக்கப்படுகிறது; அரசும் ஒரு சாட்சியாகிறது.இது குறித்து, விரிவாக சொல்கிறார் பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம்.அவர் கூறியதாவது:சார் பதிவாளர் தன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியின் அனைத்து நில உரிமை ஆவணங்களையும் மையப்படுத்தி, பாதுகாத்து வருபவர். இவரிடம் உள்ள ஆவணமே சொத்துரிமை கொண்டவரை நிலைநிறுத்துவதாக அமைகிறது. சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பும் SLP No 25213-2024 இதையே சுட்டிக்காட்டுகிறது. எவரிடம் வரி வசூல் செய்வது என்பதை ஆவணப்படுத்த, அரசு தன் வருவாய் துறை ஆவணங்களான பட்டா, சிட்டா, அ பதிவேடு, டி.எஸ்.எல்.ஆர்., ஆகியவைகளை உருவாக்குகிறது.இதற்காக, சார் பதிவாளரிடம் உரிமையாளர் விபரங்களை, அவ்வப்பொழுது பெற்று இந்த ஆவணங்களை புதுப்பித்து வைக்க வேண்டியதாகிறது. இதற்கு பதிவுசெய்யப்பட்ட சொத்துரிமை ஆவணமே மூலமாகும். வருவாய் துறையின் புதுப்பிக்கும் செயல் தாமதம் அல்லது தவிர்க்கப்படின், சட்டபூர்வமான சொத்துரிமையாளரின் பெயர், வருவாய் ஆவணங்களில் கிடைக்கப்பெறாது.எனவே ஒரு சொத்தின் உரிமையாளரை உறுதிப்படுத்துவது சொத்துரிமை ஆவணமே. வருவாய் ஆவணங்கள் ஒரு சாட்சியாக அமையலாமே தவிர, உறுதிப்படுத்துவதாக அமையாது என்பதாகவே உச்ச நீதிமன்றமும் கருதுகிறது.ஒரு சொத்தின் உரிமையாளரை அறிய, வில்லங்க சான்று மற்றும் பதிவிடப்பட்ட ஆவண நகல் ஆகியவற்றை, நில புல எண் கொண்டு, tnreginet.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக எவரும் எப்பொழுதும் பெறலாம். விண்ணப்பித்த ஓரிரு நாட்களிலேயே, ஆவண நகல் கிடைக்கும்.கட்டட அனுமதி மற்றும் இதர சார்பு செயல்களுக்கும், வருவாய் துறை ஆவணங்களை தவிர்த்து பதிவு ஆவணங்களை மட்டுமே கேட்கும் பட்சத்தில் மிகவும் எளிதாகவும், சிறப்பாகவும் அமையும். மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.