24/7 மகிழ்ச்சி
மழலையர் உலகில் இவர் கதைசொல்லி; ஆச்சரியங்கள் நிறைந்த அதிசய உலகினுள் குழந்தைகளை அழைத்துச் செல்லும் சிறகில்லா தேவதை; 'மன் கி பாத்' உரையில் நம் பிரதமரால் புகழாரம் சூட்டப்பட்ட இவர், காஞ்சிபுரம் மாங்காடு பகுதியைச் சேர்ந்த 40 வயது ஸ்ரீவித்யா வீரராகவன்.'நான் சிறந்த கதைசொல்லி'ன்னு பெருமைப்படுறீங்களா?என்னைவிட அழகழகா குழந்தைகள் கதை சொல்றப்போ நான் எப்படி பெருமைப்பட முடியும்; என் கதைகள் அறிவுரைகளால நிரம்பியிருக்கும்; இதனால சில குழந்தைகளுக்கு என் கதைகள் திகட்டவும் வாய்ப்புண்டு. ஆனா, குழந்தைகளோட கதைகள்ல மீன்கள் கூட நாமளும் ஜோடியா நீந்தலாம்; சிறகு பூட்டி வானத்துல மிதக்கலாம்! அவங்க கதைகள்ல ரசிக்கும்படியா எதுவும் இருக்கணும்னு அவசியமில்லை; கண்களை உருட்டி, கை கால்களை ஆட்டி அவங்க கதை சொல்ற விதமே அவ்வளவு அழகா இருக்கும்!குழந்தைகள்கிட்டே கோபத்தை காட்ட முடியாதது ஏன்?ஏன்னா... அவங்களுக்கு நடிக்கத் தெரியாது; அந்த நேர்மையை நம்ம மனசு ரசிக்குது. 'எனக்கு கதையில வர்ற ஆளு பேரு பிடிக்கலை; அவருக்கு என் பேரை வைச்சாதான் நான் கதை கேட்பேன்'னு சொல்லி காதுகளை மூடிக்கிற குட்டிப் பையன்கிட்டேயும், 'வெயிட் பண்ணுங்க... தண்ணி குடிச்சிட்டு வந்துடுறேன்'னு கதைக்கு இடையில எழுந்து ஓடுற குட்டி பாப்பாகிட்டேயும் எப்படி கோபப்பட முடியும்!தடுப்பூசிகள்* 'நாளையில இருந்து என்னைப் பார்த்து மட்டும்தான் கதை சொல்லணும்'னு உரிமையோட மிரட்டுற அன்பு!* கதை கேட்குற நேரம் முழுக்க திறந்து வைச்சிருந்த வாயை கதை முடிஞ்சதும் 'படக்'குன்னு மூடிக்கிற அழகு!இதையெல்லாம் விட, 'போன்ல உங்களைப் பார்க்கப் பிடிக்கலை; நேர்ல வந்து எப்போ கதை சொல்வீங்க?'ன்னு கேட்கிற பாசம்... இதெல்லாம்தான் இப்போ என்னை ஆரோக்கியமா வைச்சிருக்கிற தடுப்பூசிகள்! குழந்தை மனதுஒரு குழந்தையோட அழுகையை நிறுத்த இன்னொரு குழந்தைகிட்டே கதை சொல்வேன்; கண்ணீர் கன்னத்தோட இது மெதுவா வந்து பக்கத்துல உட்கார்ந்துக்கும். சோகமா இருக்கிற குழந்தைக்கு ஒரு கதாபாத்திரம் தந்து நடிக்க வைச்சா இயல்பு நிலைக்கு மாறிடும். குழந்தைகளோட மனசுக்கு இப்படி சிகிச்சை தர்ற என் கதைகள் எனக்கும் புத்துணர்ச்சி தருது! குழந்தைகளுக்கு கதை சொல்றதால நான் ரொம்ப சுறுசுறுப்பா இயங்குறேன்ங்கிறது 100 சதவீதம் உண்மை.'மம்மி'களுக்கு செல்லமா ஒரு குட்டு...கதைகள் தான் குழந்தைகளை சந்தோஷப்படுத்தும்னு இல்லை; மடியில பத்து நிமிஷம் உட்கார வைச்சு அன்பா பேசினா போதும்!