விடியும் வரை கிறுக்குவேன்
ஜூலை 26: திருத்தப்பட்ட 'நீட்' தேர்வு முடிவுகளின் முரண்பாடுகளில் சிரிக்கிறேன். நம் தமிழக மண்ணில் எந்த ஒரு குற்றச்சாட்டிற்கும் இடம்கொடுக்காமல் நேர்மையாய் நிகழும் அரசு தேர்வுகளை நினைத்து பெருமைப்படுகிறேன்! ஜூலை 27: 'விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கூடாது' எனப் போராடும் ஏகனாபுரவாசிகளை ஏன் பார்க்கிறாய்; 'ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில்திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்' எனச்சொல்லும் நம் முதல்வரைப் பார்! ஜூலை 31: 'கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' எனச் சொன்னவர் வாழ்ந்த இம்மண்ணில், தமிழக அறநிலையத்துறை மூன்று ஆண்டுகளில் 1,921 கோவில் கும்பாபிஷேகங்களை நிகழ்த்தி இருப்பது அசாதாரண ஆன்மிக புரட்சி!ஆகஸ்ட் 05: 'கொலைக்களமாகி வருகிறதா தமிழகம்' எனும் சிந்தனையுடன் இருப்பின் பதற்றமே மிஞ்சும்; குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டு; அப்பதற்றம் பஞ்சாய் பறக்கும்! ஆகஸ்ட் 06: 'மழையால் சென்னையில் எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை' என்று முதல்வர் சொன்ன செய்தியில் இருந்த தித்திப்பு, 'மழையால் சென்னை பேருந்து நிலையங்கள் குளம் போல் மாறிவிட்டன' எனும் உண்மையில் இல்லை!