உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / அது வாகனமல்ல என் தந்தையின் ஆன்மா

அது வாகனமல்ல என் தந்தையின் ஆன்மா

பெற்றவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வெறும் பொருட்களல்ல; அவை அவர்கள் வாழ்ந்த காலத்தின் நினைவலைகள். கேரள மாநிலம் பாலக்காட்டில், ஒரு மகன் தன் தந்தைக்காகச் செய்த செயல், இன்று பலரது கண்களையும் ஈரமாக்கியுள்ளது.பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன். இவர் 1970-களில் ஒரு 1958 மாடல் 'ராயல் என்பீல்டு புல்லட்டை வைத்திருந்தார். இது 1958-ல் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். இந்தியாவில் ராயல் என்பீல்டு தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பே இறக்குமதி செய்யப்பட்ட அரிதான மாடல்களில் இதுவும் ஒன்று. இந்த மாடல்கள் இன்றும் அதன் கணீரென்ற சத்தத்திற்காகவும் , கனமான இன்ஜின் அமைப்பிற்காகவும் சேகரிப்பாளர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன.இது போன்ற புல்லட்டை அந்த காலக்கட்டத்தில் வைத்திருப்பது என்பது மிகப்பெரிய கௌரவமான விஷயமாகும், அது அந்த குடும்பத்தின் அடையாளமாகவும் இருந்தது.1985-ம் ஆண்டு சங்கரனின் குடும்பம் கடும் வறுமையில் சிக்கியது. குடும்பத்தை நடத்தவும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வேறு வழியின்றி, தனக்குப் பிடித்தமான அந்த புல்லட்டை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்க சங்கரன் முடிவெடுத்தார்.அப்போது சிறுவனாக இருந்த அவரது மகன் கிரண், தன் தந்தை அந்த வாகனத்தை விற்கும்போது ஒரு குழந்தையைப் பிரிவது போலக் கதறி அழுததை இன்றும் நினைவுகூர்கிறார். 'தன் உடலின் ஒரு பாதியை விற்பது போல என் தந்தை அன்று வருந்தினார்,' என்கிறார் கிரண். அந்த மனவேதனையிலேயே, விற்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் சங்கரன் காலமானார்.காலச்சக்கரம் சுழன்றது:ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஹோட்டல் தொழில் செய்து வந்த கிரண், பொருளாதார ரீதியாக உயர்ந்ததும் தனது முதல் இலக்காகத் தந்தை பயன்படுத்திய அந்த புல்லட்டைத் தேட ஆரம்பித்தார். தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பழைய வாகனச் சந்தைகளில் புல்லட்டை தேடி அலைந்து திரிந்தார். ஆனால், அந்த புல்லட்டின் 'பதிவு எண்' தவிர அவரிடம் வேறு எந்தத் தகவலும் இல்லை.கடந்த டிசம்பர் மாதம், அரசின் 'பரிவாகன்' இணையதளத்தில் அந்த எண்ணைச் சோதித்தபோது, அது கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமல் என்பவரிடம் இருப்பது தெரிந்தது. உடனே கண்ணூர் விரைந்த கிரண், அந்த புல்லட்டைத் திரும்பக் கேட்டார். ஆரம்பத்தில் விற்க மறுத்த அமல், கிரண் தன் தந்தையுடன் அந்த புல்லட்டில் அமர்ந்திருக்கும் பழைய புகைப்படத்தைக் காட்டி அதன் உணர்ச்சிகரமான பின்னணியைச் சொன்னதும் மனம் இளகினார்.மேலும் அதன் சந்தை மதிப்பை விட அதிகம் கொடுத்தும் அமலை சம்மதிக்கவைத்தார்.40 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது வீட்டின் வாசலில் தந்தை பயன்படுத்திய அதே 'புல்லட்' வந்து நின்றபோது, கிரண் மட்டுமல்லாது அந்த ஊரே நெகிழ்ந்து போனது. 'இது வெறும் இரும்பு வாகனம் அல்ல; என் தந்தையின் ஆன்மா என்னோடு இருப்பது போன்ற உணர்வு,' என்கிறார் கிரண்.தேடலும் அன்பும் இருந்தால் இழந்த எதையும் மீட்டெடுக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை