ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ., 23ல் பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார்.புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்களாகி உள்ளனர். புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 24 வரை கோலாகலமாக நடக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.இவ்விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி இன்று நவ.,19 காலை புட்டபர்த்தி வந்தார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்கினர், பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து, கோசாலையில் இருந்த பசுக்களுக்கு தீவனம் வழங்கினார்.பின் பிரம்மாண்டமான ஹில்வியூ மைதானத்தில் துவங்கிய விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிரபல பாடகி சுதா ரகுநாதன் ,டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி , மற்றும் நாட்டியக்கலைஞர்களின் அசத்தல் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.விழாவுக்கு ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் தலைமை வகித்தார். , ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண்,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,நடிகை ஐஸ்வர்யா ராய், ஆகியோர் சத்ய சாய்பாபாவின் போதனைகள், சேவையின் மகிமைகளை பற்றி பேசினர்.புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக நுாற்றாண்டு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இந்த பிறந்தநாள் நூற்றாண்டு விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, தெய்வீக ஆசீர்வாதம் ஆகும்.சத்ய சாய்பாபா இப்பொழுது நம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துகிறது. சத்ய சாய்பாபா மனித வாழ்க்கையில் சேவை என்பதை இதயத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புட்டபர்த்தியின் புனித பூமியில் இருப்பது ஒரு சிறந்த ஆன்மிக அனுபவம்.சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது. சத்ய சாய்பாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளது. ஏழை மக்களுக்கான நமது சமூக பாதுகாப்பு திட்டங்கள் சர்வதேச அரங்குகளில் போற்றப்படுகின்றன. உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நாம் எட்ட முடியும்.சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று கூடியிருக்கும் பலர் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகளால் தங்கள் வாழ்க்கையை மாற்றியுள்ளனர். பாபாவின் உத்வேகத்துடன், ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மற்றும் அதன் துணை அமைப்புகள் புனிதமான பணியை தொடர்கின்றன என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.சத்ய சாய் பாபாவை கவுரவிக்கும் வகையில் ரூ.100 சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட்டது நமது அரசிற்கு ஒரு மரியாதை. இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாபா சேவகர்கள் சேவை பாராட்டுதலுக்கு உரியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.-எல்.முருகராஜ்.