UPDATED : செப் 25, 2025 06:34 PM | ADDED : செப் 25, 2025 06:27 PM
திருமலையில் ஆன்மிக விருந்து - பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் சிறப்புகள்திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் 'கோவிந்தா, கோவிந்தா' குரல்கள்,கோவில் மணி ஓசை, தாளவாத்தியங்களின் அதிர்வுகள்-இவை அனைத்தும் சேர்ந்து, சிரஞ்சீவி நகரம் திருமலையை ஆன்மிகத் திருவிழாவால் திளைக்கச் செய்கின்றன.மலையப்ப சுவாமி குருவாயூரப்பனாகசெப்டம்பர் 25ஆம் தேதி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை, மலையப்ப சுவாமி குருவாயூரக் கிருஷ்ணனின் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐந்து தலை கொண்ட வாசுகி நாகம் தன்னுடைய எஜமானரான கிருஷ்ணரை ஏந்திச் சுமந்து, நாலு மாட வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்றது நிகழ்வின் உச்சக் கட்டமாக அமைந்தது. அந்தத் தரிசனம், ஆயிரக்கணக்கான பக்தர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.இந்நிகழ்வில், திருமலைப் பீடத்தின் மூத்த, இளைய ஜியர்கள் கலந்து கொண்டு பக்தர்களுடன் ஆனந்தத்தில் மூழ்கினர்.பாரம்பரியக் கலை நிகழ்ச்சிபிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 24ஆம் தேதி திருப்பதியில் உள்ள மஹாதி அரங்கில் தமக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கியது பி. ஆனந்த் ஜெயராம் தலைமையிலான பாரதநாட்டியம் குழு.நிகழ்ச்சி ஆண்டாள் -ரங்கநாதர் கல்யாண வைபவம் எனும் திருமண காட்சி நடன வடிவத்தில் தொடங்கியது.நடனத்தின் ஒவ்வொரு அடியும்,அசைவும் ஆண்டாளின் பாசத்தையும் பக்தியையும் வெளிப்படுத்தியது.முதல்நாளான நேற்று துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வருகை, முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டுவஸ்திரம் சமர்ப்பித்தல்,கொடியேற்றம்,பெரிய சேஷ வாகன புறப்பாடு என்று முக்கிய நிகழ்வுகள் பல இடம் பெற்றிருந்தன.பக்தர்கள் அதிகம் எதிர்பார்த்தது சுவாமி தரிசனத்திற்கு பிறகு கலை நிகழ்ச்சிகளைத்தான் அதை பல மாநில கலைஞர்கள் கண்கவர் நிகழ்ச்சிகளாக நடத்தி பிரமாதப்படுத்திவிட்டனர்.-எல்.முருகராஜ்