உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / தண்ணீர் திருவிழா

தண்ணீர் திருவிழா

மியான்மரின் வீதிகள் எங்கும் நேற்று தண்ணீர் துளிகளும், மக்களின் சிரிப்பொலியும் அலைமோதியது காரணம் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் தண்ணீர் திருவிழாதான், தலைநகர் யங்கோன் நகரில் மிக விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து ஆடிக்கொண்டே ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி விழாவைக் கொண்டாடினர்.இது வெறும் பொழுதுபோக்கிற்கான விளையாட்டல்ல; இதற்குப் பின்னால் ஒரு ஆழமான ஆன்மீகத் தத்துவம் உள்ளது. கடந்த ஆண்டில் செய்த தவறுகள், பாவங்கள் மற்றும் மனக்கசப்புகள் அனைத்தையும் இந்தத் தண்ணீர் கழுவிச் சென்றுவிடும் என்பது இவர்களின் நம்பிக்கை.கோடையில் வாடும் நம்மூரில் இது போன்ற விழா நடந்தால் எவ்வளவோ குளிர்ச்சியாக இருக்குதானே.யங்கோன் வீதிகளில் ஷான் இன மக்கள் தங்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை முழங்க, லாவகமாக நடனமாடுகின்றனர். அவர்கள் மீது குழாய்கள் மற்றும் வாளிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படும்போது, அவர்கள் அதை ஒரு ஆசீர்வாதமாகவே கருதுகின்றனர்.இந்தத் திருவிழாவின் போது அறிமுகமில்லாத நபர்கள் மீதோ அல்லது வழிப்போக்கர்கள் மீதோ தாராளமாகத் தண்ணீர் ஊற்றலாம். யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்; மாறாகச் சிரித்துக்கொண்டே வரவேற்பார்கள்.முதியவர்கள் மற்றும் பௌத்த துறவிகள் மீது மட்டும் நேரடியாகத் தண்ணீர் ஊற்றாமல், அவர்களின் கரங்களில் நறுமண நீரைத் தெளித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த விழாவின் போது இனிப்பு உருண்டைகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். சில உருண்டைகளுக்குள் ரகசியமாக காரமான மிளகாய் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும், அது யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களைக் கிண்டல் செய்து மகிழ்வார்கள்.சுட்டெரிக்கும் ஏப்ரல் மாத வெயிலுக்கு இதமாகவும், மனதிற்கு உற்சாகமாகவும் அமையும் இந்தத் திருவிழா, மியான்மரின் ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது. நவீன மாற்றங்கள் பல வந்தாலும், ஷான் இன மக்கள் இன்றும் தங்களின் வேர்களை மறக்காமல் இத்திருவிழாவைக் கொண்டாடுவது உலகப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.தண்ணீர் என்பது வெறும் திரவம் மட்டுமல்ல, அது ஒரு புதிய வாழ்வின் தொடக்கம் என்பதை மியான்மரின் இந்தத் தின்யான் திருவிழா நமக்கு உணர்த்துகிறது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை