உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / சாத்தான்குளம் வழக்கு தண்டனை; போலீசாருக்கு கடும் எச்சரிக்கை

சாத்தான்குளம் வழக்கு தண்டனை; போலீசாருக்கு கடும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில், தந்தை - மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், மதுரை நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு, இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி. இந்த வழக்கில் போலீசார் செய்தது மிகவும் கொடூரமான குற்றம் என்பதுடன், நீதித் துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில், கடுமையான தண்டனை விதிப்பதே சரியாக இருக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு, கொரோனா பரவல் காலத்தில் நாட்டையே உலுக்கிய சம்பவம்; அதேபோல, அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பும், முன்மாதிரி தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது போலீசாரும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தும், அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவர் என்ற சி.பி.ஐ., தரப்பு வாதத்தை ஏற்று, அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. அதனால், 2020 முதல் தற்போது வரை, ஒன்பது பேரும் சிறையில் தான் உள்ளனர். 'தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி' என்று சொல்லப்படுவது உண்டு. அப்படி இழுத்தடிக்கப்பட்ட பல வழக்குகளில், குற்றம் செய்தவர்கள் தப்பித்த வரலாறு உண்டு. ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க ஆறு ஆண்டுகள் ஆனாலும், சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதே பலரின் கருத்து. காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவல் துறையினரின் கொடூரங்கள் என்பது, தமிழகத்தில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் அவ்வப்போது நடந்து வருகின்றன. அவை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், சாத்தான்குளம் கொடூரம், அநீதி மற்றும் சட்டமீறலின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தியது. சட்டத்தை மதிப்பவர்களாக, பொறுப்புடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்து வந்த இருவர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டது, பொதுமக்களுக்கு தெரியவந்த போது, அவர்கள் வெகுண்டு எழும் சூழ்நிலையும் உருவானது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளை மீறி, கூடுதல் நேரம் தங்களது மொபைல் போன் கடையை திறந்து வைத்திருந்தது மட்டுமே இறந்த தந்தை, மகன் செய்த குற்றமாகும். அவர்களை எச்சரிக்கை செய்து விட்டிருக்கலாம். அதை விடுத்து கொடூரமாக அடித்துக் கொன்றது, மன்னிக்க முடியாத செயலாகும். மேலும், போலீஸ் பணியில் சேரும் சிலர், காக்கி சட்டையை அணிந்தவுடன், தங்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் கொடுத்து விட்டது போல செயல்படுவதும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போல நடந்து கொள்வதும் இன்றும் நடைமுறையில் உள்ளது. இதன் வாயிலாக, அப்பாவிகளை அவர்கள் கொடுமைகளுக்கு ஆளாக்குவதும் தொடர்கிறது. அதற்கு போலீசார் எதிர்கொள்ளும் கடுமையான பணிச்சுமையும் முக்கியமான காரணமாகும். அதனால், மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கான அதிநவீன தொழில் நுட்பங்களையும் மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன், பொதுமக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ளும் வகையில், கடுமையான பணி விதிமுறைகளை உருவாக்க வேண்டும். லஞ்சம் பெறுவதற்காக அப்பாவிகளை துன்புறுத்தும் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரித்த இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நாகரிக சமூகத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது. காவல் துறை சித்ரவதை மற்றும் காவல் மரணங்களுக்கு எதிராக, அவ்வப்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு பலன் அளிப்பதாகவும் அமைந்துள்ளது. இந்த வழக்கில் விதித்த மரண தண்டனையானது, எதிர்காலத்தில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளிடம் அத்துமீறி செயல்படும் காவல் துறையினருக்கு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதன் பிறகாவது, சட்டத்தை மீறும் போலீசாரின் செயல்பாடுகளில் மாற்றம் வரும் என நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
ஏப் 13, 2026 20:55

குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும்.... அப்போது தான் இவர்களை போன்ற கறுப்பு ஆடுகளுக்கு புத்தி வரும்.


MP.K
ஏப் 13, 2026 16:30

From this Judgement, one can believe our Judicial System but whether the poor people affordable to get justice easily and wait for years to get justice. Let the Natural Justice prevail.


M S RAGHUNATHAN
ஏப் 13, 2026 14:53

போலீசாருக்கு தண்டனை சரி. ஆனால் சட்டத்தை மதிக்கமாட்டேன் என்று சொன்னவருக்கு எதற்கு அரசின் சார்பில் உதவித் தொகை. இவ்வாறு அரசு செய்வது சட்ட மீறல்களை ஊக்குவிக்கும்.


V Venkatachalam, Chennai-87
ஏப் 13, 2026 14:36

தமிழ்நாடு ஸ்காட்லாந்து யார்டு புலீஸ் வரலாற்றில் இது பெரிய கரும்புள்ளி. புலீஸ் பெருமையை மேலும் பறை சாற்றும் இந்த நிகழ்வு போலீஸ் தலைமையிலிருந்து வரும் உத்தரவுகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான நடைமுறையை எதிர்த்து புலீஸ்காரர்கள் முறையிடலாம் என்பதையும் அந்த சந்தர்ப்பங்களில் நீதி மன்றத்தை நாடலாம் என்பதையும் நீதிபதி அவர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள். அது காவலர்களுக்கு ஒரு வெளிச்சத்தை கொடுத்து இருக்கிறது என்பதில் ஐயமில்லை.


V.Mohan
ஏப் 13, 2026 13:12

சும்மா தமிழன்,திராவிடன் என்று பொய்யான பெயர்களில் கருத்து போட்டு விடியல் ஸ்டாலீனுக்கு முட்டு கொடுக்கும் ? எந்த அதிகாரியின் உத்தரவும் இவர்களுக்கு தேவைப்படவில்லை. ஏன் என்றால் இவர்கள் இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்து பின் கூட்டணியாக செயல்படுவது தான் வழக்கம். கட்சி தலைவர்கள் தான் முதலாளிகள் இவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொன்னவுடன் பொத்துக் கொண்டு கோபமாக பதிவு போடும் நல்லவர்களே உங்க விடியல் முதலாளிகளுகாகு போலீஸ் துறையில் ஜாதிவாரியாக கட்சிமூலம் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தக


ram
ஏப் 13, 2026 10:51

என்னமோ கீழ் நீதிமன்ற தீர்ப்பை வைத்து, அடுத்து ஹை கோர்ட் இங்கு ஒரு பத்து வருடங்கள் மேல் வழக்கு நடக்கும் அப்புறம் supreme கோர்ட் அங்கு ஒரு பாத்து வருடங்கள் மேல் வழக்கு நடக்கும் ஒருவேளை அங்கு அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால், already சிறையில் இருந்ததை காண்பித்து வெளியே வந்து விடுவார்கள். அப்படிஇல்லையென்றால் அண்ணா பிறந்த நாள் பொது திருட்டு திமுக இவர்களை ரிலீஸ் செய்து விடுவார்கள் எதிர்காலத்தில்.


G Mahalingam
ஏப் 13, 2026 09:45

திமுக ஆட்சியில் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது அதிகம். வெளியே வந்து விடுவார்கள் என்று நன்றாக தெரிந்தும் ஒரு மூன்று நாட்களாவது திமுகவை எதிர்த்தவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்ற கேடுகெட்ட புத்தி சில போலீசாருக்கு இருக்கு.


sankaran
ஏப் 13, 2026 09:13

இந்த 9 பேருக்கும் என்றைக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற படுமோ, அன்றைக்குத்தான் இந்த நாட்டின் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்..


l.ramachandran
ஏப் 13, 2026 08:25

இந்த செய்தி தினமலரில் மட்டும் விலாவாரியாக வருகிறது. மற்ற எந்த ஊடகமும் கண்டுகொள்வதில்லை. இதிலிருந்தே போலீசுக்கு யார் அதிகம் பயப்படுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.


Ms Mahadevan Mahadevan
ஏப் 13, 2026 08:18

காவல் துறையை அரசின் கட்டுப் பேஸ்ட்டில் இருந்து மாற்றி நீதி துரையின் கட்டுபோகாஸ்டில் கொண்டு வர வேண்டும் . காவலர்த்துறையினர் தவறு செய்யும் பட்சத்தில் டபனி நெருக்கம், கடுந் தண்டனை என்ட்ரி கிடுக்க வேண்டும் . அப்பத்தான் சரியாக நடப்பார்கள்.


முக்கிய வீடியோ