உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கப்பல் கட்டும் தமிழன்!

கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கப்பல் கட்டும் தமிழன்!

கோவையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த ஒரு எளிய குடும்பத்து மாணவன், இன்று சிங்கப்பூரில் கப்பல் மேல் கப்பல் கட்டி அசத்துகிறார். சமீபத்தில் தங்கள் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு, முன்னாள் மாணவனை சிறப்பு விருந்தினராக அழைத்து கொடியேற்றச் செய்து கவுரவித்துள்ளது பள்ளி நிர்வாகம்.அந்த பள்ளி: பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி. மாணவன்: ரஞ்சித்குமார். ரஞ்சித்குமாருடன் ஒரு கலந்துரையாடல்... ''இந்த பள்ளியில் 10ம் வகுப்பு வரையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் பிளஸ் 2 வரையும் படித்தேன். பின்னர் கொச்சின் பல்கலையில் பி.டெக்.,நேவல் ஆர்க்கிடெக்ட் படித்த பின், மும்பையில் உள்ள கப்பல் கட்டுமான துறையில் வேலை கிடைத்தது. கப்பல் கட்டுவது, மேற்பார்வை உள்ளிட்ட பல்வேறு பணிகளை அங்குதான் கற்றுக்கொண்டேன். பின்னர் கொச்சின், தூத்துக்குடி, குஜராத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டேன்.

சிங்கப்பூர் சென்றது எப்படி?:

வாழ்க்கையில் மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும்; உயர வேண்டும் என்று எனது பள்ளி அளித்த பயிற்சியே காரணம். சிங்கப்பூர் சென்று அங்கிருந்த கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இந்தோனேசியா, சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

கப்பல் கட்டுமானம் புதிய விஷயமாக இருக்கிறது...

அது குறித்து கூறுங்கள்?: இதுவரை, 15க்கும் மேற்பட்ட கப்பல்களை கட்டிய அனுபவம் உண்டு. நிறைய கப்பல்களை மறு சீரமைத்துள்ளேன். இதில் கன்டெய்னர்கள், ஆட்கள், அரிசி உள்ளிட்ட தானியங்கள், வாகனங்கள், எண்ணெய் உள்ளிட்டவை கொண்டு செல்லும் கப்பல்களும் அடக்கம். தற்போது சிங்கப்பூரில் சொந்தமாக நான்கு கப்பல் கம்பெனிகளை ஆரம்பித்து, கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

மறக்க முடியாத அனுபவம் ஏதாவது உண்டா?:

உண்டு. நான் வடிவமைத்த கப்பல் ஒன்று இந்தோனேசியா அருகே பழுதாகி நின்றது. அதற்கான மொத்த பொறுப்பும் என்னுடையது என்பதால், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அதை கரையில் இருந்தபடி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தேன்.

இப்போது ஏ.ஐ.வந்து விட்டதே...உங்கள் தொழிலுக்கு பாதகமாக இருக்காதா?:

ஏ.ஐ. வந்தாலும், கப்பல் கட்டுமான தொழிலை எவ்விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பெரும் அளவிலான பொருட்களை கொண்டு செல்ல, கப்பல் ஒன்றுதான் வழி. அந்த தொழில்நுட்பம் நமக்கு உதவலாம். ஆனால் கப்பல் தொழிலுக்கு பாதிப்பு வரவே வராது.

கோவையில் படித்து வளர்ந்த மாணவன் என்ற முறையில் கோவை மாணவர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

வாழ்க்கையில் முன்னேற நம்மிடம் உள்ள திறமையை அடையாளம் கண்டு, அதை செம்மைப்படுத்தி, அதில் முழு திறமையை காட்ட வேண்டும். எனக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மட்டுமல்லாமல் அயல் மொழிகளும் தெரியும். இது எனது தொழில் முன்னேற்றத்துக்கு நன்கு கைகொடுத்தது. ஆகவே படிப்புடன், முடிந்தளவு கூடுதல் மொழிகளையும் கற்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை