“மாற்றம் என்பது வகுப்பறையிலிருந்து தொடங்க வேண்டும்” என்பார்கள். அதை வெறும் பேச்சோடு நிறுத்தாமல், தன் வீட்டு வரவேற்பறை வரை கொண்டு வந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் காங்கயம், கல்லாங்காட்டுப்புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் 3-ம் வகுப்பு மாணவி தன்யா வர்ஷினி. விளையாடித் தீர்க்க வேண்டிய கோடை விடுமுறையில், வீட்டில் துாக்கி எறியப்படும் குப்பைகளை எல்லாம் கண்கவர் கலைப்பொருட்களாக மாற்றி, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். கொரோனா கால கற்றல் இடைவெளியைக் குறைக்கத் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 'எண்ணும் எழுத்தும்' திட்டம், “மாணவர்களின் சிந்தனைத் திறனைஎந்த அளவுக்குத் துாண்டியுள்ளது என்பதற்கு இந்த மாணவியே நேரடி சாட்சி... எங்கள் பள்ளியில் எப்போதும் 'பூஜ்ஜியக்கழிவு மேலாண்மை' முறை யைத்தான் பின்பற்றுவோம்.
ஒரு பொருள் குப் பைக்குப் போவதைத் தடுக்க வேண்டும், மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்று குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுப்பேன்” என்று கூறுகிறார் வகுப்பாசிரியை மகேஸ்வரி. ஆசிரியையின் வார்த்தைகளைத் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்ட தன்யா வர்ஷினி, கடந்த மே மாத கோடை விடுமுறையில் தன் அம்மாவின் துணையோடு வீட்டில் 'வேஸ்ட்' என்று துாக்கிப்போட இருந்த பொருட்களைச் சேகரித்தார். காலி தண்ணீர் பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள், அட்டைப் பெட்டிகள், உடைந்த வளையல்கள், பாட்டில் மூடிகள், சாக்லேட் கவர்கள் எனப் பல பொருட்களை சிரத்தையுடன் அழகிய வீட்டு அலங்காரப் பொருட்களாகவும், பேனா ஸ்டாண்ட்களாகவும் மாற்றி அசத்தியிருக்கிறார். வட்டாரக் கல்வி அலுவலர் சுப்ரமணியம், “சுற்றுப்புறத்தைத் துாய்மையாக வைக்கவும், பாதுகாக்கவும் இதுபோன்ற செயல்பாடுகள் முக்கியம். தன்யா வர்ஷினியைப் போல எல்லா மாணவர்களும் பழகிக்கொள்ள வேண்டும்” என உற்சாகப்படுத்தினார். பள்ளித் தலைமையாசிரியை சாவித்திரி கூறுகையில், “எங்கள் பள்ளி மாணவியின் இந்த முயற்சி பெருமையளிக்கிறது; இனிவரும் காலங்களிலும் இதைத் தொடர்ந்து ஊக்குவிப்போம்” என்றார் உறுதியுடன். டிஜிட்டல் திரைகளில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் தலைமுறை குழந்தைகள் மத்தியில், கழிவுப் பொருட்களைக் காவியமாக மாற்றிய தன்யாவர்ஷினியின் முயற்சி மற்ற மாணவர்களுக்கும் ஒரு சிறந்த ஊக்கமருந்து!