ஆட்டிசம் குழந்தை பார்த்துக்கொள்வது எங்கள் பாக்கியம்
பெண்மையின் பலம் என்பது மென்மையல்ல; மன வலிமை! இதை நிரூபித்து காட்டுபவர்கள் ஆட்டிசம் குழந்தைகளின் அம்மாக்கள். தாயாக இருப்பது ஒரு வரம். சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு தாயாக இருப்பதோ ஒரு அர்ப்பணிப்பு. இவர்களில் பலர் நன்கு படித்தவர்கள். பார்த்துக்கொண்டிருந்த நல்ல வேலைகளை துாக்கி வீசி விட்டு, குழந்தைகளோடு வீட்டோடு ஒன்றி விட்டவர்கள். அப்படிப்பட்ட உன்னத அம்மாக்கள் சிலரிடம் மகளிர் தினத்தையொட்டி பேசினோம்...!
புவனேஸ்வரி
மருத்துவமனையில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றினேன். அப்போதுதான் குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது தெரிந்தது. உடனே வேலையை உதறிவிட்டு என் குழந்தைக்காக முழு நேரத்தையும் செலவழிக்க முடிவு செய்தேன். கடந்த 20 ஆண்டுகளாக என் குழந்தையுடன் முழு நேரம் செலவழிப்பதால், வெளி உலகை தெரிந்து கொண்டேன். என் குழந்தைக்கு என்னை விட்டால் யார் இருக்கிறார்கள்? உமாராணி
13 வருடத்திற்கு முன் நல்ல வேலையில் இருந்தேன். எல்லாமே மகிழ்ச்சியாகதான் போய் கொண்டிருந்தது - மகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை உணரும் வரை. இதோ இந்த நிமிடம் வரை, அவளுடன்தான் என் காலம் நகர்கிறது. இந்த தனி உலகம் வேறு விதமான மகிழ்ச்சியை தருகிறது. எனக்கு இப்போது 54 வயது. என் உடலை அதிகம் பார்த்துக் கொள்வதை விட, மகள் நலனில்தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதை பாக்கியமாகவே நினைக்கிறேன். பிரியா
பி.காம் படித்த நான் திருமணத்துக்கு பிறகு கண்டிப்பாக ஒரு பேங்க் வேலைக்கு போக நினைத்திருந்தேன். பிறந்த குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதால், பத்து வருடங்களாக அவளுடன்தான் முழு நேரமும் செலவழிக்கிறேன். எந்தவொரு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் பொழுதுபோக்கு இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. மகளுடன் கழிக்கும் நேரம், வாழ்க்கை நிறைய நல்ல விஷயங்களை சொல்லித்தந்துள்ளது. மகிழ்ச்சியுடன் கற்று ஒவ்வொரு விடியலையும் புதிதாக பார்க்கிறேன்.
ஆசிரியர் ஆக மாறிய கீதா@கீதாவின் கதை சற்று வித்தியாசமானது. எம்.காம்., ஐ.பி., படித்து அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில், 8 ஆண்டுகள் வேலை பார்த்து வந்த இவர், தனது இரண்டாவது பையனுக்கு ஆட்டிசம் என்று தெரிந்ததும் வேலையை ரிசைன் செய்து விட்டு தன்னை ஆசிரியராக மாற்றிக்கொண்டார். எப்படி? இதோ அவரே சொல்கிறார். பையனின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து, ஆட்டிசம் என்பது நோய் அல்ல; தனி உலகம் என புரிந்து கொண்டேன். தினமும் சிறப்பு பள்ளியில் மகனுடன் நானும் உட்கார்ந்தேன். ஏன் நாமே ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறக்கூடாது என்று தோன்ற, இதோ ஏழு ஆண்டுகளாக புல்டைம் டீச்சர்! ரொம்ப பெருமையாக இருக்கிறது. வெளி உலகில் நிறைய கஷ்டங்கள், மன வருத்தங்கள் இருந்தாலும் இவ்வுலகில் உள்ள ஆட்டிசம் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, வேறு எந்த பிரச்னையும் பெரிதாக தெரியவில்லை. ஒரு ஆட்டிசம் குழந்தையின் தாயாக இருப்பது பெருமையாக இருக்கிறது. தன்னலமற்ற அன்பு... முடிவில்லா பொறுமை... உடையாத நம்பிக்கை... அளவற்ற தியாகம்... இதன் மொத்த உருவமே ஆட்டிசம் குழந்தைகளின் தாய்!