உலக தமிழ் பொறியாளர் மாநாட்டுக்கான கருத்தரங்கு
உலக தமிழ் பொறியாளர் மாநாட்டுக்கான கருத்தரங்கு சவுதி அரேபியா தமாமில் சிறப்பாக நடைபெற்றது.உலக தமிழ் பொறியாளர் மன்றம் (ITEF) சார்பாக செப்டம்பர் 12, 13 அன்று சென்னையில் நடைபெறும் மாநாட்டுக்கான கருத்தரங்கு சவுதி அரேபியா -தமாமில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனத்தின் பொது மேலாளர் . கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசின் அயலக வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர்.ஷா நவாஸ் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கருத்தரங்கை சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் நிதி இயக்குநர் டாக்டர். சாகுல் ஹமீது மற்றும் சவுதி அரேபியா பிரிவின் தலைவர் ரஹ்மத்துல்லா கூட்டாக தலைமை தாங்கினர். ரஹ்மத்துல்லா ITEFஇன் சவூதி அரேபிய பிரிவின் அலுவலகர்களை அறிமுகம் செய்து மன்றத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம் குறித்தும், உலக தமிழ் முதல் பொறியாளர்கள் மாநாடு குறித்தும் நிர்வாக பிரிவு இயக்குநர் டாக்டர். சாகுல் ஹமீத் விளக்கமளித்தார். கதிரேசன் வாழ்த்துரை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் மேலான்மை இயக்குநர் செல்வம், பொறியாளர்கள் தொழில் முனைவோர்களாக முன்னெடுக்க ITEF உறுதுணையாக இருக்கும் எனவும் ஆகவே உலகத்தமிழ் மாநாட்டில பங்கெடுத்து பயனடைய வேண்டும் என உரையாற்றினார். தமிழக அரசின் பிரதிநிதி ஷாநவாஸ் கான் Global Connect Overseas மூலமாக வேலைவாய்ப்பை தமிழக அரசு செய்து வருவதை மேற்கோள் காட்டினார், ITEF யின் மூலமாக குவைத்தில் உள்ள எண்ணெய் கட்டுமான நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கிருஷ்ண மூர்த்தி, தான் அயலக தமிழர் நல் வாரியத்தின் முன்னாள் இயக்குனராக இருந்த சமயத்தில் தமிழக அரசின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் பொன்னான வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை நினைவு கூர்ந்தார்.உலக அரங்கில் இரண்டாம் Diaspora என்கிற நிலையில் உள்ள தமிழர்களின் பொறியியல் புகழ்களை உலகரங்கில் அதிகமாக எடுத்துச்செல்ல வேண்டும், நோபல் பரிசுகளை அதிகமான தமிழர்கள் வென்றெடுக்க வேண்டும் என தெரிவித்தார். ITEF நடத்தும் இந்த உலகத்தமிழ் பொறியாளர்கள் மாநாடு பெரும் மாற்றத்தை உருவாக்கும் என கூறினார். மேலும் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் சவுதி அரேபியா பிரிவின் பெண்கள் அணியின் துணைத்தலைவி திருமதி லக்சணா, வேலைவாய்ப்பு மற்றும் பணியிட மாற்றத்திற்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் செயலி உருவாக்க கோரிக்கை முன்வைத்தது. அதனை மேலாண்மை இயக்குநர் செல்வம் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.இக்கருத்தரங்கில், 200க்கும் மேற்பட்ட தமிழ் பொறியாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்வில், பலர் சென்னையில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பதாகவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை மாநாட்டில் கலந்து கொள்ள ஊக்குவிப்பதாகவும் உறுதியளித்தனர்.இந்நிகழ்ச்சியை அழகிய முறையில் அப்சர்கான் தொகுத்து வழங்கினார், இறுதியில் ஜமால் நன்றியுரை வழங்கினார். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.தினமலர் வாசகர்- ஆரீப் அப்துல் சலாம்.