அன்பிற்கும் வேண்டும் அடைக்குந்தாழ்!
மஸ்குலர் டிஸ்ட்ரோபி போன்ற பிறவியால் ஏற்படும் நோய்கள் உள்ள நபர்களுக்குத் திருமணம் செய்துகொள்வதில் அமெரிக்க சட்டத் தடைகள் இல்லை. எனினும், இந்த நிலையைப் புரிந்து கொண்டு திருமண முடிவை எடுக்கின்றவர், தமது உடல்நிலை காரணமாக அரசின் மூலம் கூடுதலான இழப்பீடுகள் அல்லது சலுகைகள் பெறுவது சிக்கலானதாக இருக்கலாம். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி நலச்சலுகை திட்டங்களும், தகுதி விதிகளும் இருப்பதால், திருமணம் செய்துகொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை சட்ட ஆலோசனைகள் பெறுவது நலம்தான். தனிநபர் உரிமைகளுக்கும் சமூகப் பொறுப்புகளுக்கும் இடையில் சமநிலை பேணுவதன் மூலம், நம்மால் எல்லோருக்கும் உகந்த வழிகாட்டலை உருவாக்க முடியும். அமெரிக்காவில், பெரும்பாலும் திருமணம் இரண்டு நபர்கள் மண வாழ்வு தொடர முடிவு செய்யும்போது நடக்கிறது. திருமணத்திற்கு, அவர்கள் சமூகப் பாகுபாடோ நிதி நிலைக்கான முன்னுரிமைகளையோ அமைக்கமாட்டார்கள். மருத்துவ குறைபாடுகள் இருந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் தெற்கு கரோலினாவில் பணிபுரிந்தபோது எனது மேலாளர் மிகவும் நல்ல உடல்நலம் உள்ள நபராக இருந்தார். ஆனால் அவரது கணவர் பார்வையற்றவர் என்று கூறினார். அவர் பார்வையற்ற ஒருவரை எப்படி மணந்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் அவரைப் பள்ளிப் பருவத்திலிருந்தே அறிவார். அவர்கள் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவரைத் திருமணம் செய்து கொள்ள யாரும் அவளை வற்புறுத்தவில்லை. கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி என்பது ஒரு நோய் அல்ல. பல மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து குடும்பம் பிள்ளைகள் என நன்றாக வாழ்கிறார்கள். ஆனால் தசை சிதைவு என்பது ஒரு நோய், அது மேலும் வளரக் கூடியது. அந்த நோய் உள்ளவர்களின் அடுத்த தலைமுறையிலும் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது. திருமணம் என்பது இரு நபர்களுக்கு இடையில் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளும் சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் அங்கீகரிக்கப்படும் ஒன்றாகும். பெரும்பாலும் ஒருவருக்கொருவர் ஆதரவு, மரியாதை, தோழமை, காமம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆகிய அனைத்தும் அடங்கும். திருமணம் மனித வாழ்வின் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது இரண்டு பேரையும் ஒன்றிணைத்து, குடும்பம் அமைத்தல், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற வாழ்க்கையின் சவால்களைத் தாண்டிச் சேர்ந்து பயணம் செய்ய உதவுகிறது. திருமணம் நம்பிக்கையின் அடிப்படையில் உறவை உருவாக்குவது. இது பெரும்பாலும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதற்கான உறுதிமொழிகளைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது. திருமணக் கலாச்சாரங்களும் மரபுகளும் பரந்த மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், திருமணத்தின் உறவு ஒன்றாக வளர்ந்து எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான உறுதியை நிலைத்திருக்கிறது. திருமணத்தில் உடலுறவு என்பதும் ஒரு முக்கிய அம்சம். அது ஒவ்வொரு தம்பதியினருக்கும் வேறுபடும். மேலும் அது தனிநபர் மதிப்புகள், கலாச்சார நம்பிக்கைகள் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தது. பலருக்கு, உடலுறவு திருமணத்தின் முக்கிய அங்கமாகும். ஏனெனில் இது நெருக்கத்தை வளர்க்கிறது, உணர்ச்சிப் பிணைப்புகளை வலுப்படுத்தவும் உடல் நெருக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது ஓர் உறவின் மூலம் அன்பு, நம்பிக்கை சீரான மனநிலையைப் பகிர்ந்துகொள்ளும் வழியாகவும் பார்க்கப்படுகிறது. சிலருக்கு, பூரணமான உடல் உறவு ஆரோக்கியமான மகிழ்ச்சியான திருமணத்திற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. எனினும், உடலுறவு மட்டும் ஒரு திருமணத்தை நிமிர்ந்து நிறுத்துவதில் மூல காரணமாக இல்லாது போகலாம். உடல் தொடல், உணர்ச்சி ஆதரவு, பகிர்ந்த மதிப்புகள், நம்பிக்கை சுய மரியாதை போன்றவை திருமணத்தின் அடித்தளம் ஆகும். இவை ஒரு திருமணத்தை நிரந்தரமாக்க உதவும். உண்மையில், பல தம்பதிகள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை சந்திக்கும்போது, உடல் நெருக்கத்தின் அளவு மாறலாம். இருப்பினும், அவர்களது உணர்ச்சி பிணைப்பும் உறுதிப்பாடும் தொடர்ந்து வளரக்கூடும். ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் திறந்தவையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். சிலருக்கு உடலுறவு முக்கிய அங்கமாக இருக்கலாம், மற்றவர்களுக்கு, உணர்ச்சி பிணைப்பும் தோழமையும் முக்கியமானதாக இருக்கும். முக்கியமானது என்பது இருவருக்கும் பொருந்தக்கூடிய சமநிலையை உருவாக்குவது. அங்கு ஒவ்வொருவரும் மதிப்பு, மரியாதை மற்றும் திருப்தியுடன் உணர முடியும். ஓர் ஆண் ஆணைத் திருமணம் செய்வதும் ஒரு பெண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழும் முறையையும் அமெரிக்காவும் சில நாடுகளும் அங்கீகரித்து உள்ளன. அத்தகைய திருமணங்களில் அவர்கள் இருவரும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒன்றி காமம் என்னும் ஒன்றை அடைகிறார்கள். LGBT திருமணங்களில் உடல் நெருக்கமும் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவம் தனிநபர் ஜோடிகளின் உறவு முறைகளின் மதிப்புகளிலும் தேவைகளிலும் அடிப்படையாக வேறுபடும். மஸ்குலர் டிஸ்ட்ரோபி போன்ற மரபணு நோய்களைக் கொண்டவர்களின் திருமணம் தொடர்பான கருத்துக்களில், தனிநபரின் திருமண உரிமையை மதிக்கும் சட்டம் அவசியமாக உள்ளது. அதேசமயம், இந்த நோயின் தொடர்ச்சியாக எதிர்கால சந்ததிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்காக மருத்துவ ஆலோசனைகளையும் சமூகப் பொறுப்பையும் உடைய ஒரு முறையான கட்டமைப்பு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். இது போன்ற திருமணங்கள் சரியா? தவறா? என்பதைத் தாண்டி இத்திருமணங்களாலும் மரபணுக் கொடுப்பினாலும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கருத்துகள் ஒரே சார்பில் மட்டுமின்றி, சமூக நலனையும் தனிநபர் உரிமையையும் சமமாகக் கொண்டு அணுகப்பட வேண்டும். இதற்கான கருத்துக்களும் அறிவுறுத்தல்களும் சமூகநல முன்னேற்றத்திற்காகவே நிகழ்த்தப்படவேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த நோயைக் குணப்படுத்தும் மருந்து இதுவரை இவ்வுலகில் கண்டு பிடிக்கவில்லை. உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் நோய் நொடி இல்லாமல் பிறந்து ஆரோக்கியத்துடன் இன்பமாக வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அளவுகடந்த அன்பு செலுத்துவதிலும் அதனை நடைமுறைப் படுத்துவதிலும் சமூகம் சார்ந்த அக்கறை வேண்டும். அன்பிற்கும் வேண்டும் அடைக்குந்தாழ்! - நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்