புனித் செய்த உதவிகளைத் தொடர்வேன் : விஷால் அறிவிப்பு
ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் 'எனிமி' படம் தமிழ், தெலுங்கில் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், இயக்குனர் ஆனந்த்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஷால், “புனித் ராஜ்குமார் சிறந்த நடிகர் மட்டுமல்ல எனக்கு நல்ல நண்பரும் கூட. அவருடைய இழப்பு திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் தான். அவரைப் போன்ற ஒரு எளிமையான சூப்பர் ஸ்டாரை நான் இதுவரை பார்த்ததில்லை. பல சமூக சேவைகளை அவர் செய்து வருகிறார். புனித் ராஜ்குமாரால் 1800 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களது கல்விப் பொறுப்பை அடுத்த வருடம் முதல் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.
விஷால் அவருடைய அம்மா பெயரில் உள்ள தேவி அறக்கட்டளை மூலம் ஏற்கெனவே சில சமூக சேவைகளைச் செய்து வருகிறார். தற்போது புனித் ராஜ்குமார் செய்து வந்த சமூக சேவைகளையும் எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது அவருக்கு பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.