நான்கு முறை தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகையான கங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். ஏற்கனவே மகாராஷ்டிராவில் உள்ள உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவரது கணக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கங்கனா, 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014ஆம் ஆண்டுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. காங்கிரஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சி என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மிகப்பெரிய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சியைச்சேர்ந்த பிரித்தி சர்மா மேனன் என்பவர் கங்கனா மீது மும்பை போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கங்னாவின் அவதூறு மற்றும் தேச துரோக கருத்துக்கு அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து கங்கனாவிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.