ஹிந்தியில் 100 கோடி வசூலை நெருங்கும் 'புஷ்பா'
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் நேரடிப் படங்களுக்கு இணையாக வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. இங்கு மட்டும் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஹிந்தியில் பெரிய அளவில் படத்தை விளம்பரப்படுத்தவில்லை என்றாலும் வேறு நேரடி ஹிந்திப் படம் எதுவும் போட்டிக்கு இல்லாத காரணத்தால் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. அல்லு அர்ஜுனின் படங்களை யு டியுபில் மட்டும் அதிகம் பார்த்த ரசிகர்களுக்கு தியேட்டர்களில் 'புஷ்பா' படத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தது.
அதனால் நல்ல வசூலைப் பெற்ற இப்படத்தின் வசூல் தற்போது 95 கோடியைத் தொட்டுவிட்டதாம். விரைவில் 100 கோடி சாதனையைப் படைத்துவிடும் என்கிறார்கள். அல்லு அர்ஜுனின் திரையுலகப் பயணத்தில் இது ஒரு முக்கிய சாதனையாக அமையும்.