'பாய்காட் பதான்' , 'பேன் பதான்' - இந்துக்கள் ஆவேசம்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் 'பதான்' படத்தின் முதல் சிங்கிளான 'பேஷ்ரம் ரங்' பாடல் இரு தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் பாடலுக்கு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டு நாட்களில் 34 மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது.
பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறமும், பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள 'பேஷ்ரம் ரங்' என்ற வார்த்தைகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'பேஷ்ரம் ரங்' என்றால் 'வெட்கமற்ற நிறம்' என்று அர்த்தம். பாடலின் முடிவில் காவி நிற நீச்சல் உடை ஒன்றை அணிந்து வருகிறார் தீபிகா. அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்துக்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
தீபிகாவின் ஆபாசமான நடன அசைவுகளும், அவர் மீது ஷாரூக் கை வைத்திருப்பதும் மிகவும் மோசமாக உள்ளது, வேண்டுமென்றே இந்துக்கள் மனம் புண்படும்படி இப்படி செய்திருக்கிறார்கள் என்று பலரும் ஆவேசத்துடன் 'பாய்காட் பதான், பேன் பதான்' என பதிவிட்டு டுவிட்டரில் டிரென்ட் செய்து வருகிறார்கள்.