உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொடர்ந்து கொலை மிரட்டல் : குண்டு துளைக்காக அதிநவீன கார் வாங்கிய சல்மான்கான்

தொடர்ந்து கொலை மிரட்டல் : குண்டு துளைக்காக அதிநவீன கார் வாங்கிய சல்மான்கான்

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்வதை அடுத்து, அவர் தன் பாதுகாப்புக்காக, 'நிசான் பேட்ரோல்' என்ற குண்டு துளைக்காத சொகுசு காரை வாங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், 57, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். உலகம் முழுதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். மான் வேட்டை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சல்மான் கானுக்கு, பஞ்சாபை சேர்ந்த நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது.

இந்த கும்பல் தான் பஞ்சாபைச் சேர்ந்த பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூசேவாலாவை, 2022ல் காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது. இதையடுத்து, சல்மான் கானுக்கு ஏற்கனவே உள்ள தனியார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் குண்டு துளைக்காத எஸ்.யு.வி., வகை கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.

கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரபல கார் நிறுவனமான நிசானின் 'பேட்ரோல்' காரை அவர் வாங்கி உள்ளார். உலக அளவில் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக நிசான் பேட்ரோல் கருதப்படுகிறது.

இதில், குண்டு துளைக்காத பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காரை அவர் வாங்கியுள்ளார். இந்த வகை கார்கள் இந்தியாவில் விற்பனையில் இல்லை. பெரும்பாலும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வி.வி.ஐ.பி.,க்கள், தங்கள் பாதுகாப்புக்காக இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வகை கார் 17 அடி நீளம் உடையது. இதன் கண்ணாடி உள்ளிட்ட வெளிப்புறம், எப்பேர்பட்ட துப்பாக்கி குண்டுகளையும் ஊடுருவ அனுமதிக்காத, 'பி - 6, பி - 7' பாதுகாப்பு அம்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, நிசான் பேட்ரோல் கார்கள், சர்வதேச சந்தையில், 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சல்மானின் கார், 'புல்லட் புரூப்' என்பதால், இதன் விலை 4 - 5 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !