'பாய்' படம் எந்த மதத்தினரையும் புண்படுத்தாது: இயக்குனர் விளக்கம்
புதுமுகங்கள் உருவாக்கி உள்ள படம் 'பாய்'. நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா, வில்லனாக தீரஜ்கெர் நடித்துள்ளனர். கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்தே சர்ச்சை கிளம்பியது. காரணம் 'பாய்' என்ற டைட்டிலுக்கு கீழ் 'சிலீப்பர் செல்' என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
அதில் சர்ச்சைக்கு விளக்கம் அளித்து அதன் இயக்குனர் பேசியதாவது: பாய் என்றால் சகோதரன் மட்டுமல்ல நண்பன் என்றும் சொல்லலாம். படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை. மனிதநேயம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்கிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை குறிக்கும் விதமாகத்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. படம் பற்றி பலருக்கு சந்தேகம் இருக்கும். படம் வெளிவரும்போது அனைத்து தரப்பினரும் வரவேற்கும் படமாக இருக்கும். என்றார்.