என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம்
தெலுங்குத் திரையுலகத்தில் தனித்த நடிகராக விளங்கியவர் மறைந்த என்டிஆர். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஒன்றுபட்ட ஆந்திர முதல்வராகவும் இருந்து தெலுங்கு மக்களுக்காக பல நல்ல விஷயங்களைச் செய்துள்ளார். சென்னையில் செயல்பட்டு வந்த தெலுங்கு திரையுலகத்தை ஐதராபாத்திற்கு மாற்றியவர் என்டிஆர்.
பத்மவிபூஷன் விருது பெற்று டில்லியிலிருந்து ஐதராபாத் திரும்பிய நடிகர் சிரஞ்சீவி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்டிஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கிடைத்தால் நான் மிகவும் மகிழ்வேன். அரசு ஆதரவுடன் அது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
மேலும், ஆந்திர சட்டசபைத் தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடும் தனது தம்பி பவன் கல்யாணுக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்றும் கூறினார். “எனது ஆதரவு எப்போதும் பவன் கல்யாணுக்கு உண்டு. எங்களது குடும்பம் அவரது அரசியல் வாழ்க்கையை எப்போதும் வாழ்த்தும்,” என்றும் தெரிவித்தார்.
தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை மறைந்த நடிகரும், முதல்வருமான எம்ஜிஆருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.