டர்போ கிளைமாக்ஸில் உதவிய விஜய்சேதுபதிக்கு மம்முட்டி நன்றி
மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான படம் டர்போ. மம்முட்டியை வைத்து ஏற்கனவே போக்கிரி ராஜா, மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கிய புலி முருகன் இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி இருந்தாலும் கமர்சியலாக மிகப்பெரிய வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் ஆச்சரியமாக நடிகர் விஜய்சேதுபதி தனது குரல் மூலம் படத்தின் க்ளைமாக்ஸில் பங்களிப்பு செய்திருந்தார்.
அதாவது படம் முடிந்து விட்டது என்று நினைக்கும் நிலையில் இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று சொல்லும் விதமாக பின்னணியில் ஒலிக்கும் குரல் விஜய்சேதுபதியுடைய குரல் தான். இந்த நிலையில் படத்தில் அவரது பங்களிப்பிற்கு நடிகர் மம்முட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளதுடன் தாங்கள் இருவரும் இணைந்து இருப்பது போன்று டர்போ படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.