"சாராய சாவுக்கு அரசின் அலட்சியமே காரணம்" : அரசியல் பேசி ஆரம்பித்து வைத்த விஜய்
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி, இதுவரை அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்காத நடிகர் விஜய், கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவத்திற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராய பலி தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் வெளியிட்ட அறிக்கை : கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவக்குவதாக கடந்த பிப்ரவரியில் அறிவித்த நடிகர் விஜய், இதுவரை அரசியல் ரீதியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கையில், கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய பலி சம்பவத்தில் இருந்து தனது முதல் அரசியல் கருத்தை தெரிவித்து ஆரம்பித்துள்ளார் நடிகர் விஜய்.