'அஞ்சான்' மாதிரி பேசி 'கங்குவா'வை காலி பண்ணிடாதீங்கப்பா…
இசை வெளியீட்டு விழாக்களில் படங்களின் கதாநாயகர்கள் பேசுவது, யு டியூப் சேனல்களில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் பேசுவது அவர்களுக்கே எதிராக அமைந்துவிடுகிறது. அதிலிருந்து ஒரு சிலர்தான் தப்பிக்கிறார்கள்.
தங்களது படங்களைப் பற்றிய நியாயமாகப் பேசினால் பரவாயில்லை. ஆனால், 'ஓவர் பில்ட் அப்' கொடுத்து அவர்களே அவர்களது படங்களைக் கெடுத்துக் கொள்கிறார்கள். 'அஞ்சான்' படத்தின் புரமோஷன் பேட்டிகளில் “மொத்த வித்தையையும் இறக்கி வச்சிருக்கேன்' என இப்படியான பேச்சுக்களை ஆரம்பித்து வைத்த பெருமை இயக்குனர் லிங்குசாமியையே சேரும். இன்று வரை அந்த டயலாக்கை ரசிகர்கள் மறக்காமல் இருக்கிறார்கள்.
அந்த அளவிற்கான ஒரு பேச்சைத் தற்போது 'கங்குவா' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியிருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், “கங்குவா பார்ட் 1க்கு யாராவது தெரியாமல் போட்டி போட வரலாம். ஆனால், 'கங்குவா' பார்ட் 2க்கு யாருமே போட்டி போட வர முடியாது. அந்த அளவுக்கு 100 சதவீதம் நம்பிக்கையோட இருக்கேன்,” என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்தப் பேச்சை இப்போதே 'டிரோல்' செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். படம் வரும் வரை 'கொஞ்சம் சும்மா இருங்களேன்பா, பேசிப் பேசியே காலி பண்ணிடாதீங்கப்பா,” என சமூக வலைத்தளங்களில் பலரும் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.