உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெற்றோர், மகன் மூலம் நிவாரண நிதி வழங்கிய நவ்யா நாயர் : விமர்சித்தவர்களுக்கு பதிலடி

பெற்றோர், மகன் மூலம் நிவாரண நிதி வழங்கிய நவ்யா நாயர் : விமர்சித்தவர்களுக்கு பதிலடி

சமீபத்தில் கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் மண்ணில் புதைந்தன 300-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும் விதமாக கேரள மாநில அரசுக்கு திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, மாய கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நவ்யா நாயர் தனது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

இந்த தொகையை அவரது பெற்றோரும் அவரது மகனும் இணைந்து முதல்வர் நிவாரண நிதி பிரிவு அதிகாரியிடம் வழங்கினார்கள். தற்போது குமுளி பகுதியில் ஒரு படப்பிடிப்பில் நவ்யா நாயர் கலந்து கொண்டிருப்பதால் தன்னால் நேரில் செல்ல முடியவில்லை என்று கூறி தனது மகன் மற்றும் பெற்றோர் மூலம் நிவாரண நிதி வழங்கிய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நவ்யா நாயர். இது குறித்து விமர்சித்த நெட்டிசன் ஒருவர் ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு பத்து பேருக்கு தெரியப்படுத்துவீர்களா என்று கிண்டலாக கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த நவ்யா நாயர், “எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பதற்கு பதிலாக உங்களுடைய மனது என்ன சொல்கிறதோ அதை நீங்கள் கொடுங்கள். உங்களுக்கு அப்படி ஒரு புகைப்படத்தை பதிவிடுவது சரியாக தோன்றவில்லை என்றால் நீங்கள் அதை செய்யாதீர்கள்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

நவ்யா நாயரின் இந்த பதிலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். பல நட்சத்திரங்கள் 10 லட்சம் 20 லட்சம் என கொடுத்து வருவதால், ஒரு லட்சம் என்பது கூட சிலரின் பார்வையில் ரொம்பவே குறைவான தொகையாக தெரிவதுதான் மிக கசப்பான உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !