விக்ரமின் 'தங்கலான்' படத்துக்கு எதிராக பாய்ந்த வழக்கு!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் தங்கலான். ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கும் வந்த இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் வரவேற்பு பெற்றது . இந்த நிலையில் அடுத்தபடியாக தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு படக்குழு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
திருவள்ளுவரை சேர்ந்த பொற்கொடி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில், புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் பற்றி நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த தங்கலான் படம் ஓடிடியில் வெளியானால் இரண்டு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது. இதனால் தங்கலான் ஓடிடியில் வெளியாவது தள்ளிப் போகும் என்று தெரிகிறது.