ஹனுமான் இயக்குனர் தயாரிப்பில் 'சூப்பர் உமன்' படமாக உருவாகும் மகாகாளி
இந்த வருடம் தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'ஹனுமான்'. தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்ஞனாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், தனியாக 'பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ள பிரசாந்த் வர்மா, ஆர் கே டி ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பிலும் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் தான் தயாரிக்கும் முதல் படத்திற்கு 'மகாகாளி' என்று டைட்டில் வைத்து இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அறிவித்துள்ளார் பிரசாந்த் வர்மா. சர்க்கஸ் பின்னணியில் இந்தப் படம் உருவாவது போல வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு சிறுமி புலியுடன் முகத்தோடு முகம் வைத்து அன்யோன்யமாக இருப்பது போன்றும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. மகாகாளி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் சூப்பர் உமன் படமாக உருவாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.