உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 கோடி கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் : விஜய் பட நாயகி ஓப்பன் டாக்

100 கோடி கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் : விஜய் பட நாயகி ஓப்பன் டாக்

பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் கடந்த 2000ல் ஹிருத்திக் ரோஷன் அறிமுகமான கஹோ நா பியார் ஹை என்கிற படத்தில் தான் தானும் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களை பிஸியாக நடித்து இரண்டாம் வரிசை கதாநாயகிகளில் தன்னை தக்க வைத்துக் கொண்டிருந்தார். 2003ல் தமிழில் புதிய கீதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். அவர் நடித்த ஒரே தமிழ் படமும் அதுதான்.

கடந்த 2001ல் கடார் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த அமிஷா பட்டேல் அதில் சன்னி தியோலின் மனைவியாக நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2023 கடார் 2 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திலும் முதல் பாகத்தைப் போலவே சன்னி லியோனின் மனைவியாக ஒரு இளம் வாலிபனுக்கு அம்மாவாக கொஞ்சம் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார் அமிஷா பட்டேல்.

இந்த படத்தை அனில் சர்மா என்பவர் இயக்கியிருந்தார். சமீபத்தில் அமீஷா பட்டேலின் திறமை குறித்து அனில் சர்மா ஒரு பேட்டியில் கூறும்போது, “எந்த கதாபாத்திரம் என்றாலும் அமிஷா பட்டேல் அழகாக பொருந்துவார். அனேகமாக ஒரு படத்தில் அவரை மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் திட்டமும் இருக்கிறது” என்று கூறியிருந்தார். ஆனால் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து அதே சமயம் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார் அமிஷா பட்டேல்.

அதில் அவர் கூறும் போது, “அனில் சார்.. உங்கள் மீது நிறைய மரியாதை இருக்கிறது. அதற்காக நீங்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்க வேண்டும் என்று இல்லை. இனிவரும் கடார் வரிசை படத்தில் மட்டுமல்ல வேறு எந்த படத்திலும் 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். ஏற்கனவே கடார் படத்தில் நான் நடித்திருந்ததால் 23 வருடங்களுக்குப் பிறகு இப்போது கடார் 2 உருவானபோது அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !