உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம்

பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம்

சிவபெருமான் பக்தர்களுடன் நாடகமாடி பல விஷயங்களை மக்களுக்கு போதிப்பது பற்றியதுதான் 'திருவிளையாடல் புராணம்'. இதில் வரும் பல கதைகளை தொகுத்து உருவானதுதான் 1965ம் ஆண்டு ' ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த 'திருவிளையாடல்'.

இந்த படத்திற்கு முன்பே 1946ம் ஆண்டே ஒரு திருவிளையாடல் படம் வெளிவந்தது. படத்தின் தலைப்பு 'தெய்வ நீதி'. ஆனால் இந்த படத்தில் திருவிளையாடல் புராணத்திலிருந்து ஒரு கதை மட்டுமே இடம் பெற்றது.

சிவபெருமானின் தீவிர பக்தரான பாண்டிய மன்னரின் கதை இது. ஒரு பெண் பாண்டிய மன்னனின் அரசவைக்கு வந்து, கோவிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தனது ஒரே இளம் மகளைக் வேட்டைக்காரன் ஒருவன் கொன்று விட்டதாக கூறி நீதி கேட்கிறாள். மன்னனும் வேட்டைக்காரன் குற்றவாளி எனக் கண்டறிந்து அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறான்.

இந்த நிலையில் வேட்டைக்காரனின் மனைவி தன் கணவனுக்கு நீதி கேட்டு மன்னனிடம் வருகிறாள், ஆனால் மன்னன் அவளுடைய கோரிக்கையை கேட்கவில்லை. அன்றிரவு மன்னன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு தெய்வீகக் குரல் அசரீரியாக கேட்கிறது. வேட்டைக்காரன் குற்றவாளி அல்ல என்றும், மன்னர் அநீதி இழைத்து விட்டார் என்றும் அந்த குரல் சொல்கிறது. இறுதியில், உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது, வேடன் வேறு யாருமல்ல முருகப்பெருமான் என்பதும், அவரது மனைவி வள்ளி என்பதும் தெரிய வருகிறது.

எந்த குற்றத்தையும் தீவிரமாக விசாரிக்காமல் தீர்ப்பு வழங்ககூடாது என்பது இந்த கதை சொல்ல வந்த நீதி. படத்திற்கு பாபநாசம் சிவன் பாடல் எழுத எம்.எஸ். ஞானமணி இசையமைத்துள்ளார். பாண்டிய மன்னனாக செல்லப்பாவும், தன் கணவன் மரணத்திற்கு நீதி கேட்கும் பெண்ணாக கண்ணாம்பாவும் நடித்திருந்தனர். இவர்களுடன் கே.ஆர்.ராமசாமி, என்.ஆர்.சகுந்தலா, எஸ்.பி.எல்.தனலட்சுமி, டி.எஸ்.துரைராஜ், எம்.வி.மணி, குளத்து மணி, கே.ஆர்.செல்லம், 'புலிமூட்டை' ராமசாமி, டி.பி.பொன்னுசாமி பிள்ளை, டி.பி.கே.சாஸ்திரி மற்றும் கே.வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !