'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்து பயங்கரவாத முகாம்கள் மீதும், பாகிஸ்தான் மீதும் இந்திய ராணுவம் கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர்தான் இந்திய மக்களின் மனதில் கடந்த சில நாட்களாக ஒலித்து வருகிறது. இந்தப் பெயரை வரும் நாட்களில் பயன்படுத்திக் கொள்ள ஹிந்தி சினிமா தயாரிப்பாளர்கள் அவர்களது சங்கத்தில் பதிவு செய்ய போட்டி போட்டு விண்ணப்பம் செய்வதாக நேற்றைய செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
அதற்கு ஒரு படி மேலே, சில கார்ப்பரேட் நிறுவனங்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்கு 'டிரேட் மார்க்' பதிவு செய்ய விண்ணப்பம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே 7ம் தேதியன்று, முதலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம், அடுத்து மேலும் மூன்று தனிநபர் விண்ணப்பம் செய்துள்ளனர். நேற்று இன்னும் இரண்டு பேர் விண்ணப்பித்துள்ளனர். முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை என்பது இந்த 'டிரேட் மார்க்' வழங்கப்படும்.
இந்திய மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ உடனடியாக இப்படி வியாபாரத்திற்காக விண்ணப்பம் செய்வதா என்ற சர்ச்சை கடுமையாக எழுந்தது. அதையடுத்து ரிலயன்ஸ் நிறுவனம் அவர்களது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இவ்வளவு சர்ச்சை எழுந்த பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர் எந்த ஒரு திரைப்பட சங்கங்களிலும், டிரேட் மார்க் பதிவிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றே தெரிகிறது.