கிரவுட் பண்டிங்கில் உருவான 'மனிதர்கள்'
புதுமுகங்கள் இணைந்து கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கி உள்ள படம் 'மனிதர்கள்'. ராமு இந்திரா இயக்கி உள்ளார். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் உதவியாளர், அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மலையாள இசை அமைப்பளார் அனிலேஷ் எல் மேத்யூ தமிழில் அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் ராமு இந்திரா கூறும்போது, எளிய மனிதர்களை வைத்து ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரில்லர் படமாக உருவாகி உள்ளது. 6 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கிறார்கள். அப்போது மிகப்பெரிய சிக்கல் ஒன்று நேருகிறது. அவர்களுக்கு என்ன ஆனது, அதிலிருந்து மீண்டார்களா என்பதுதான் படத்தின் கதை. காலமும், சூழலும் மனிதர்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதை உணர்த்தும் படமாக இருக்கும். கதைக்கு தேவைப்படாததால் படத்தில் பெண் கதாபாத்திரம் இல்லை என்றார்.