பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம்
சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இதை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஆகாஷ் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கினார். விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இயக்குனர் சுதா கூறுகையில், ‛‛பராசக்தி படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டி உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதன் காரணமாகவே பராசக்தி படப்பிடிப்புக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்து இருக்கிறோம். விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவது குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, எல்லா செய்திகளும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இதற்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தவிர்த்துவிட்டார். மேலும் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை இப்போது வரை நாங்கள் முடிவு செய்யவில்லை. மொத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்வோம்'' என்றார்.