என் மேல நம்பிக்கை வெச்ச அஜித் : ஆதிக் உருக்கம்
சென்னையில் உள்ள தனியார் தியேட்டரில் நேற்று மாலை அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் 50வதுநாள் விழா கொண்டாட்டம் நடந்தது. ரசிகர்கள் கேக் வெட்டி மகிழ்ந்து இருக்கிறார்கள். இதில் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தை பொருத்தவரையில் குட்பேட் அக்லி நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. 50வது நாள் விழா, 100வது நாள் விழா என்பது கவுரவ பிரச்னைகள். அதனால், 50வது நாள் விழாவை படக்குழு கொண்டாடி உள்ளது.
அடுத்த படம் அஜித்தை வைத்து இயக்கலாம் என நம்பிக்கையுடன் இருக்கும் ஆதிக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ‛‛என்னை யாரும் நம்பாதபோது என் மீது நம்பிக்கை வெச்சு இந்த படம் கொடுத்த அஜித்திற்கு நன்றி'' என்றார். ஆனால், அடுத்த படம் பற்றிய கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை.
அதேசமயம், படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன? வசூல் என்ன? படம் தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா? அந்த கணக்கு என்ன என்பது படத்தில் நடித்த, பணியாற்றிய பலருக்கே தெரியாத விஷயமாக இருக்கிறது.