உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ்

பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ்


மலையாள திரையுலகில் சமீப காலமாக குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகராக முன்னேறி வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். மலையாளத்தில் 'ஜோசப்' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்த கவனிக்க வைத்தவர், அதன் பிறகு தான் இயக்கி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'பணி' என்கிற திரைப்படத்திலும் பிரமிப்பை ஏற்படுத்தினார்.

தமிழில் 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்தவர் தற்போது மணிரத்னம், கமல் கூட்டணியில் வெளியாகியுள்ள 'தக் லைப்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசும்போது பெரும்பாலும் ஜோஜூ ஜார்ஜின் நடிப்பு குறித்து பாராட்டி பேசத் தவறியதே இல்லை. ஆனால் இதே ஜோஜூ ஜார்ஜுக்கு நடிப்பு வரவில்லை என நடிகர் பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் ஜோஜூ ஜார்ஜ் கூறும்போது, “சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அப்படி ஒரு முறை பிரித்விராஜ் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தபோது அந்த காட்சிக்கு தேவையான உணர்ச்சியை, நடிப்பை என்னால் கொடுக்க முடியவில்லை. சில டேக்குகள் அதிகமானதால் உடனடியாக எனக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைத்து அந்த காட்சியை படமாக்கினார்கள். அந்த சமயத்தில் என்னால் கோபப்படவும் முடியவில்லை. ஆனால் என் நடிப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். அடுத்து 2018ல் வெளியான 'ஜோசப்' படத்திலிருந்து தற்போதைய 'தக் லைப்' திரைப்படம் வரையிலான எனது பயணம் ஒரு மேஜிக் ரைடு போல தான்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !