உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி

மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் 'தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது' என்றார். அவரின் இந்த கருத்துக்கு கர்நாடகத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த மாநில முதல்வரே கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கமல்ஹாசன் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால் 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் வெளியிட அந்த மாநில வர்த்தக சபை தடை விதித்தது.

இதை எதிர்த்து கர்நாடகத்தில் 'தக் லைப்' படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கமல்ஹாசனை கடுமையாக சாடினார். எந்த அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது? என்று சொன்னீர்கள், அதற்கு ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். மன்னிப்பு கேட்கும்படி நீதிபதி அறிவுரை கூறினார். ஆனால் கமல்ஹாசன், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி 'கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா?' என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று பதிலளித்தார்.

அதன்பிறகு வழக்கு விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அதுவரை படத்தை கர்நாடகத்தில் வெளியிட தடை விதித்தார்.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இதற்கிடையில் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கர்நாடகத்தில் 'தக் லைப்' படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்துள்ளதாகவும், இது நீதித்துறையின் அதிகாரத்தை மீறியது ஆகும் என்றும், அதனால் இந்த தடையை நீக்கி படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு, கன்னட சினிமா வர்த்தக சபைக்கு 'தக் லைப் படத்திற்கு எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது' என்று விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதோடு வழக்கின் அவசரத்தன்மை கருதியே இந்த நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !