உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி

கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி

மலையாள திரையுலகில் பிரபல நடிகர்களில ஒருவர் ஜெயசூர்யா. தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் தற்போது கத்தனார் என்கிற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் வெள்ளியன்று காலை கண்ணூர் அருகில் உள்ள கோட்டியூரில் உள்ள மகா சிவன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார் ஜெயசூர்யா.

அப்போது கோவில் தேவஸ்தான நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டிருந்த புகைப்படக்காரரும் பத்திரிகையாளருமான சஜீவ் நாயர் என்பவர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்தார். அப்போது ஜெயசூர்யாவுடன் வந்திருந்த நபர்களில் மூன்று பேர் அவர் புகைப்படம் எடுத்ததை தடுத்து கேமராவை பிடுங்கி சேதப்படுத்தியதுடன் சஜீவ் நாயரின் வயிற்றிலும் குத்தி அவரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தேவஸ்தான மருத்துவமனையில் சஜீவ் நாயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தாக்கியவர்கள் மீது காவல்துறையிலும் அவர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “தேவஸ்தான மூலம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள புகைப்படக் கலைஞர் நான். ஜெயசூர்யா இன்று கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக கோவில் நிர்வாக அதிகாரியிடம் இருந்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே நான் அவரை புகைப்படம் எடுக்க முயன்றேன். என்னை தாக்க வந்தவர்களிடம் கூட என்னுடைய அடையாள அட்டையை காட்டியும் அவர்கள் என்னை தாக்கி எனது கேமராவையும் சேதப்படுத்தி உள்ளார்கள்” என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !