அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித், த்ரிஷா நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படம் வெற்றிப் படம் என்று மிகவும் பெருமையாகப் பேசினார்கள். ஆனால், படத்திற்கு தமிழகத்தில் மட்டுமே தியேட்டர் வசூலில் லாபம் கிடைத்தது, ஒட்டு மொத்தமாக தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் என்று தகவல் வெளியானது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக அஜித், ஆதிக் கூட்டணியின் அடுத்த படத்தைத் தயாரிப்பதிலிருந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பின்வாங்கிவிட்டதாம். அடுத்ததாக தற்போது 10 படங்களை ஒரே நேரத்தில் அறிவித்த வேல்ஸ் நிறுவனத்தில் இந்தப் படம் தயாராவதற்கு பேச்சுவார்த்தை நடந்ததாம். கூட்டி, கழித்து பார்த்ததில் தங்களுக்கு சரிப்பட்டு வராது என அவர்களும் விலகிவிட்டார்களாம்.
தற்போதைக்கு தயாரிப்பாளருக்கான தேடல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். அஜித் கேட்கும் சம்பளம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். விஜய்யின் சம்பளமே 275 கோடி என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிக் கொண்டிருக்க, அஜித் எவ்வளவு சம்பளம் கேட்பார் என ரசிகர்களும் ஒரு கணக்கு போட்டிருப்பார்கள். ஆம், ஏறக்குறைய 200 கோடி வரை கேட்கிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
இதர நடிகர்களின் சம்பளம், தயாரிப்பு செலவு அனைத்தையும் சேர்த்தால் மொத்தமாக 350 கோடி முதல் 400 கோடி வரை செலவாகும். ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவற்றின் மூலம் அதில் பாதியை மீட்க முடியும். மீதி வியாபாரம் தியேட்டர் வெளியீட்டில் நடக்க வேண்டும். அது 'குட் பேட் அக்லி' படத்திற்கு நடக்கவில்லை என்கிறார்கள். அந்தக் கணக்கை வைத்துத்தான் தற்போது அஜித் படத்திற்கான சம்பளம், பட்ஜெட் ஆகியவற்றை வைத்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.